Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திராவிட கட்சிகளுக்கு 'டப்' கொடுத்த பா.ஜ.,! சட்டசபை தேர்தலில் மாற்றத்துக்கு வழிவகுக்கும்

திராவிட கட்சிகளுக்கு 'டப்' கொடுத்த பா.ஜ.,! சட்டசபை தேர்தலில் மாற்றத்துக்கு வழிவகுக்கும்

திராவிட கட்சிகளுக்கு 'டப்' கொடுத்த பா.ஜ.,! சட்டசபை தேர்தலில் மாற்றத்துக்கு வழிவகுக்கும்

திராவிட கட்சிகளுக்கு 'டப்' கொடுத்த பா.ஜ.,! சட்டசபை தேர்தலில் மாற்றத்துக்கு வழிவகுக்கும்

ADDED : ஜூன் 06, 2024 07:08 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தொகுதியில், பா.ஜ.,வின் வளர்ச்சியை கண்டு, திராவிட கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., இரு திராவிட கட்சிகளுக்கு இடையே தான் பலத்த போட்டி நிலவும். அதில், அ.தி.மு.க., அல்லது தி.மு.க., வேட்பாளர்கள் அல்லது கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை மும்முனை போட்டி நிலவியது. பா.ஜ., போட்டியிட்டாலும், இம்முறை பெரிய வெற்றி பெறாது; ஓட்டுக்கள் பெறாது என்ற பேச்சு அடிப்பட்டது.

எப்போதும், பெயரளவு பிரசாரம், நோட்டோவுடன் போட்டியிடும் கட்சி என்ற இமேஜை உடைக்கும் வகையில், பா.ஜ.,வின் பிரசார வியூகம் அமைந்து இருந்தது.

திராவிட கட்சிகளுக்கு இணையாக பா.ஜ.,வினர் பிரசாரம் செய்தனர். விவசாயிகளை, நார் தொழில் துறையினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.

பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜனை ஆதரித்து, மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் பிரசாரம் செய்தனர். கோவையில், பிரதமர் நரேந்திரமோடி பிரசாரம் செய்தார். மேலும், கோவை லோக்சபா தொகுதியில், மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டதால், அதன் தாக்கம் பொள்ளாச்சி தொகுதியிலும் இருந்தது.

அதே நேரத்தில், மாற்றத்தை விரும்புவோர், புதிய வாக்காளர்கள் என பலரும், பா.ஜ.,வுக்கு ஓட்டு அளிக்க முன்வந்தனர்.

இதனால், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு, 'டப்' கொடுத்து போட்டி போட்டு ஓட்டுக்களை பெற்றுள்ளது.

பிரதான கட்சிகள் எதுவும் கூட்டணியில் இடம் பெறாத நிலையில், பொள்ளாச்சி தொகுதியில் தனித்து போட்டியிட்டது போன்றே இருந்தது. இந்நிலையில், கிணத்துக்கடவு சட்டசபை தொகுதியில், 58,768 ஓட்டுகள் பெற்று பா.ஜ., இரண்டாமிடம் பிடித்தது; தொண்டாமுத்துார் தொகுதியில், மூன்றாமிடம் சென்றாலும், 53,532 ஓட்டுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சியில், 38,071; உடுமலையில், 29,870, மடத்துக்குளத்தில், 20,481 என, 20 ஆயிரத்துக்கு குறையாமல் ஓட்டுக்களை பெற்றுள்ளது. வால்பாறை தொகுதியில், 19,814 ஓட்டுகள் பெற்றது. மொத்தம், 2,23,354 ஓட்டுக்கள் பெற்று, மூன்றாமிடத்தை பிடித்தது. அ.தி.மு.க.,வை விட, 57,981 ஓட்டுகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளது.

அரசு ஊழியர்கள் செலுத்திய தபால் ஓட்டுகளில், பா.ஜ., 1,409 ஓட்டுகள் பெற்று, அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளியது. பொள்ளாச்சியில், 19.8 சதவீத ஓட்டு பெற்றுள்ளது.

இதுவரை, இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியில் இருந்த நிலையில், தேசிய கட்சியாகவும், மத்தியில் ஆளும்கட்சியாகவும் இருக்கும் பா.ஜ., தமிழகத்தில் 'டெபாசிட்' கூட வாங்காது என கிண்டல் செய்தவர்கள், வாயடைக்கும் வகையில், ஓட்டு வங்கியை உருவாக்கி, அசுர வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெறாவிட்டாலும், பா.ஜ.,வின் இந்த வளர்ச்சி, இரண்டு திராவிட கட்சிகளையும் மிரள வைத்துள்ளது. பா.ஜ., வளர்ச்சி தொடர்ந்தால், சட்டசபை தேர்தலில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us