Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'செல்வமகள்' திட்டத்தில் தவணை நிலுவையா? புதுப்பிக்கலாம் என்கிறார் தபால் கண்காணிப்பாளர் 

'செல்வமகள்' திட்டத்தில் தவணை நிலுவையா? புதுப்பிக்கலாம் என்கிறார் தபால் கண்காணிப்பாளர் 

'செல்வமகள்' திட்டத்தில் தவணை நிலுவையா? புதுப்பிக்கலாம் என்கிறார் தபால் கண்காணிப்பாளர் 

'செல்வமகள்' திட்டத்தில் தவணை நிலுவையா? புதுப்பிக்கலாம் என்கிறார் தபால் கண்காணிப்பாளர் 

ADDED : ஜூன் 27, 2024 09:45 PM


Google News
பொள்ளாச்சி : கோவை மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்களில், மத்திய அரசின் செல்வமகள் திட்டத்தின் கீழ், 97,614 பேருக்கும், பொன்மகன் திட்டத்தின் கீழ், 42,184 பேரும் முதலீட்டு கணக்கை பராமரித்து வருகின்றனர்.

மத்திய அரசால், 2015ம் ஆண்டு 'செல்வமகள்' சேமிப்பு திட்டம் துவக்கப்பட்டது. இதன்படி, 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, மாதந்தோறும் இயன்ற தொகையை பெற்றோர் முதலீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நீண்ட கால முதலீடு திட்டத்தின் கீழ், 21 ஆண்டுகள் மாதந்தோறும் முதலீடு செய்யவேண்டும். 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு நிதியாண்டில், 1.50 லட்சம் ரூபாய் அதிகபட்சம் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் முடிந்த தொகையை, முதலீடு செய்யலாம். அதே போன்று, 'பொன்மகன்' திட்டத்தின் கீழ், 15 ஆண்டுகள் முதலீடு செய்வதற்கு, 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டங்களில் முதலீடு செய்தவர்களில் சிலர், பணம் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தாலும், புதுப்பித்துக்கொள்ளும் வசதி உள்ளது.

இதுகுறித்து, தபால்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர் கூறியதாவது:

தபால்துறையில் பல்வேறு முதலீடு, சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், கணக்கு துவங்கி சில மாதங்களுக்கு பின், மாத தவணை செலுத்த தவறி இருந்தால், கவலை வேண்டாம். ஆண்டுக்கு, 50 ரூபாய் புதுப்பிப்பு தொகை செலுத்தி, அக்கணக்கை மீண்டும் தொடர முடியும்.

பெண் குழந்தைகள், 10வது தேர்ச்சி பெற்ற பின்னரோ அல்லது 18 வயதிலோ படிப்பு செலவுகளுக்காக, 50 சதவீத தொகையை எடுத்துக்கொள்ள இயலும்.

21 ஆண்டுகள் நிறைவு பெற்றபின், திருமணத்துக்கு ஒரு மாதம் முன்போ அல்லது திருமணம் ஆன பின் மூன்று மாதங்களுக்குள்ளோ, திருமண அழைப்பிதழை வைத்து முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் கூட்டு வட்டி வழங்கப்படுவதால், வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us