Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாதியில் நிற்கும் ஓடை சீரமைப்பு பணி; சுகாதாரம் பாதிப்பு

பாதியில் நிற்கும் ஓடை சீரமைப்பு பணி; சுகாதாரம் பாதிப்பு

பாதியில் நிற்கும் ஓடை சீரமைப்பு பணி; சுகாதாரம் பாதிப்பு

பாதியில் நிற்கும் ஓடை சீரமைப்பு பணி; சுகாதாரம் பாதிப்பு

ADDED : ஜூலை 30, 2024 02:15 AM


Google News
Latest Tamil News

* சீக்கிரம் முடியுங்க


உடுமலையில், மழைநீர் வடிகாலான தங்கம்மாள் ஓடை சீரமைக்கும் பணி பாதியிலேயே நிற்கிறது. இதனால், செடி, கொடிகள் வளர்ந்து சுகாதார கேட்டினை ஏற்படுத்தி வருகிறது. நகராட்சி அதிகாரிகள் இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுவாமிநாதன், உடுமலை.

* காற்றில் பறக்கும் மண்


உடுமலை, பஸ் ஸ்டாண்ட் முன் ரவுண்டானாவில் அழகுபடுத்துவதற்காக, மண் தோண்டி போடப்பட்டுள்ளது. இந்த மண் காற்றில் பறந்து, வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. எனவே, இப்பணிகளை உடனடியாக முடிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வம், உடுமலை.

நகராட்சி கவனத்திற்கு


உடுமலை, ராஜேந்திரா ரோட்டில் பாதாள சாக்கடை குழிகளின் மூடிகள் சிதிலமடைந்துள்ளது. அந்த குழிகளை சுற்றிலும் ரோடு சேதமடைந்துள்ளது. வாகனங்கள் அவற்றின் மீது ஏறி செல்லும்போது மேலும் உள்வாங்கிக்கொண்டே வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

- ராஜ்குமார், உடுமலை.

தெருவிளக்குகள் பழுது


உடுமலை, சிவலிங்கம்பிள்ளை லே - அவுட் பகுதியில் தெருவிளக்குகள் பாதிக்கு மேல் பழுதாகி இருக்கின்றன. மாலை நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழந்து உள்ளது. பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியில் சென்று வருவதற்கு அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. முதியவர்கள் மாலை நேரங்களில் வீதியில் நடக்கவும் முடியாத நிலையில் இருளாக உள்ளது.

- வசந்த், உடுமலை.

கடைகள் ஆக்கிரமிப்பு


உடுமலை, வ.உ.சி., வீதியில் நடைபாதை முழுவதும் வணிக கடைகள் ஆக்கிரமித்துள்ளன. வாகனங்கள் ரோட்டின் பாதி வரை நிறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் ரோட்டோரம் நடந்து செல்வதற்கும் வழியில்லாமல் அவதிப்படுகின்றனர். வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்தும் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

- வடிவேல், உடுமலை.

'குடி'மகன்களால் தொல்லை


உடுமலை, பஸ் ஸடாண்ட் பின்புறம் ஐஸ்வர்யா நகரில் குடிமகன்கள் நிலையில்லாமல் ரோட்டில் நடமாடுவதால், வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் இப்பிரச்னையால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பில்லை என அச்சப்படுகின்றனர்.

- சீனிவாசன், உடுமலை.

* நிழற்கூரை சேதம்


பொள்ளாச்சி, கொள்ளுப்பாளையம் பயணியர் நிழற்கூரை சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால், பஸ் பயணியர் அனைவரும் இந்த நிழற்கூரையில் நிற்க அச்சப்படுகின்றனர். இது குறித்து, பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மக்கள் நலன் கருதி விரைவில் சீரமைக்க வேண்டும்.

--- -ரமேஷ், கொள்ளுப்பாளையம்.

* ரோட்டில் குழி


பொள்ளாச்சி, முருகப்பா லே-அவுட் செல்லும் ரோட்டில், பாதாள சாக்கடை மூடி அருகே குழி தோண்டப்பட்டு முறையாக சீரமைப்பு செய்யாமல், சிமென்ட் பூச்சுக்கள் வாயிலாக மோசமாக சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- -வெங்கடாசலம், பொள்ளாச்சி.

* மரக்கிளைகளை அகற்றணும்


வால்பாறை நகரில், தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. நகரில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிக்கு முன் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தின் கிளைகளை மக்கள் நலன் கருதி வெட்ட அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- -தர்சன், வால்பாறை.

டிவைடர் வையுங்க!


கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில் பயணியர் நிற்கும் இடத்தின் அருகே, டிவைடர் இருந்தது. தற்போது சேதம் அடைந்ததால் அகற்றப்பட்டுள்ளது. எனவே, பயணியர் நலன் கருதி அந்த இடத்தில் மீண்டும் டிவைடர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- -சந்தோஷ், கிணத்துக்கடவு.

சேறும், சகதியுமான ரோடு


கிணத்துக்கடவு, வேலாயுதம்பாளையத்தில் இருந்து, கோவை ரோடு செல்லும் இணைப்பு சாலையில் அதிக அளவு சேறும், சகதியும் நிறைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரோட்டில் உள்ள சேற்றை அகற்ற வேண்டும்.

-- -கோகுல், கிணத்துக்கடவு.

ரோடு முழுக்க பள்ளம்


பொள்ளாச்சி - கோவை ரோட்டில், ஆச்சிபட்டி முதல், சி.டி.சி., மேடு வரையிலும், ரோட்டின் இருபக்கமும் உருக்குலைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகனங்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றன. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க வேண்டும்.

-- கிருஷ்ணன், பொள்ளாச்சி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us