Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 50 வாக்காளரிடம் ஒரு முகவர் எஸ்.ஐ.ஆர். படிவம் பெறலாம்

 50 வாக்காளரிடம் ஒரு முகவர் எஸ்.ஐ.ஆர். படிவம் பெறலாம்

 50 வாக்காளரிடம் ஒரு முகவர் எஸ்.ஐ.ஆர். படிவம் பெறலாம்

 50 வாக்காளரிடம் ஒரு முகவர் எஸ்.ஐ.ஆர். படிவம் பெறலாம்

ADDED : டிச 03, 2025 07:15 AM


Google News
'கட்சிகளை சேர்ந்த முகவர்கள், கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்காத வாக்காளரிடம் இருந்து பெற்று, தலா, 50 படிவங்கள் வரை, உறுதிமொழி கடிதத்துடன் சமர்ப்பிக்கலாம்'' என, மாவட்ட தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. வீடு வீடாக வழங்கிய கணக்கீட்டு படிவங்களை, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க, வரும் 11ம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது.

பெரும்பாலான படிவங்கள், வினியோகிக்கப்பட்ட நிலையில், பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறுவது மந்தமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து, மாவட்ட தேர்தல் பிரிவு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பான அனைத்து அரசியல் கட்சிகளின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்த கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

குறைந்த காலம் மட்டுமே அவகாசம் இருப்பதால், பூர்த்தி செய்த படிவங்களை விரைவாக திரும்ப பெற வேண்டும்; கட்சி முகவர்கள் வாயிலாக, இப்பணிகளை செய்ய வேண்டும்; கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மற்றும் அலுவலருக்கு, கட்சியின் ஓட்டுச்சாவடி முகவர்கள், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் (பி.எல்.ஏ., -2), தினமும், 50 வாக்காளரிடம், பூர்த்தி செய்த படிவங்களை பெற்று, உறுதிமொழி கடிதத்துடன் இணைந்து, பி.எல்.ஓ. வசம் ஒப்படைக்கலாம்.

தங்கள் 'பூத்'துக்கு உட்பட்ட வாக்காளரை சந்தித்து, படிவங்களை முறையாக பூர்த்தி செய்து ஒப்படைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

திருப்பூர் தெற்கு தொகுதியில், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை பெறவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,வாகன பிரசாரம் துவக்கி வைக்கப்பட்டது.

- நமது நிருபர் -:





      Our Apps Available On




      Dinamalar

      Follow us