ஆளில்லாத தண்டவாளங்களில் கஞ்சா பறக்கிறது!'நெட்வொர்க்' அமைத்து நுாதன கடத்தல்
ஆளில்லாத தண்டவாளங்களில் கஞ்சா பறக்கிறது!'நெட்வொர்க்' அமைத்து நுாதன கடத்தல்
UPDATED : ஆக 20, 2026 07:58 PM
ADDED : ஆக 20, 2026 07:52 PM

கோவை:ரயிலில் கஞ்சா கடத்தும் கும்பல்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தண்டவாளத்தின் இருபுறமும் கஞ்சா மூட்டைகளை வீசி எறிவதால், போலீசுக்கு பெரும் தலவலி ஏற்பட்டுள்ளது.
பறந்து வந்து கீழே விழும் கஞ்சா மூட்டைகளை உடனே சேகரித்து செல்ல ஆங்காங்கே ஆட்கள் ரெடியாக நிற்கின்றனர். அல்லது எறிந்த இடங்களின் அடையாளம் சொல்லி வாட்சப் மூலமாக தகவல் அனுப்பியதும், பைக் அல்லது காரில் வேகமாக வந்து, கஞ்சா மூட்டைகளை சேகரித்து தப்புகின்றனர் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
விஜய் அரசு வந்தபின் போதை கடத்தல் கும்பல்கள், கஞ்சா விற்போர், இடைத்தரகர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. சாலை மார்க்கமாக மட்டுமின்றி பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து மூலமாகவும் கடத்தல் நடக்கிறது.
ரயில்களில் பயணிகள் போலவே டிக்கெட் எடுத்து மூட்டை முடிச்சுகளுடன் ஏறும் ஆசாமிகள், சூட்கேஸ், துணிப்பை ஆகியவற்றிலும் கஞ்சா வைத்து கடத்துகின்றனர். ரயில்வே போலீசார் பெட்டி பெட்டியாக சோதனை செய்தாலும், இவர்கள் சாமர்த்தியமாக பெட்டி மாறி தப்புகின்றனர்.
ரயிலில் தப்பித்தாலும், ஸ்டேஷன்களில் இறங்கியதும் நடக்கும் சோதனைகளில் மாட்டிக்கொள்வோம் என்பதால், கடத்தல் காரர்கள் புது முறையை பின்பற்றுகின்றனர். போய் சேர வேண்டிய ஸ்டேஷனுக்கு முன்னதாகவே, தண்டவாளத்தை ஒட்டி ஆள் நடமாட்டம் இல்லாத வயல்வெளிகள், புதர்களில் கஞ்சா மூட்டைகளை வீசி விடுகின்றனர்.
பின்னர், அந்த ஏரியாவில் வசிக்கும் நெட்வொர்க் உறுப்பினர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து எளிதாக கைமாற்றி விடுகின்றனர்.
போத்தனுார்-இருகூர் வழித்தடம் சிங்காநல்லுார் குளக்கரை, பீளமேடு-நீலிக்கோணாம்பாளையம், இருகூர்-சூலுார், கோவை-மேட்டுப்பாளையம், போத்தனுார்-பொள்ளாச்சி ஆகிய ரயில் வழித்தடங்களில் இவ்வாறு கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
472 கிலோ
கோவை வந்த பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1.10 கிலோ கஞ்சா, 1.20 கிலோ கஞ்சா சாக்லேட் உடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் கோட்டத்தில் 7 மாதங்களில் ரூ.2.36 கோடி மதிப்புள்ள 472 கிலோ போதை பொருட்கள் ரயில்களிலும், ஸ்டேஷன்களிலும் பறிமுதல் செய்யப்பட்டன; 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யார்.. யார்?
லாபம் அதிகம் கிடைப்பதால் நீலிக்கோணாம்பாளையம், ஒலம்பஸ், பள்ளபாளையம், பட்டணம், சிங்காநல்லுார், காமாட்சிபுரம், மலுமிச்சம்பட்டி, சூலுார் பகுதிகளில் பழைய குற்றவாளிகளே கஞ்சா விற்கின்றனர். அந்த கும்பல்களிடையே மோதல் அதிகரித்துள்ளதாக போலீசார் தகவல் சேகரித்துள்ளனர்.
