ADDED : செப் 23, 2025 10:52 PM
கோவில்பாளையம்; 'கிரைண்டர் ஆப்' மூலம் ஆசை காட்டி வரவழைத்து வழிப்பறி செய்த நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சூலூர் அருகே தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை கிரைண்டர் ஆப் மூலம் தொடர்பு கொண்ட சிலர் காளப்பட்டி அருகே வந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
அங்கு சென்ற அவரை ஆறு பேர் கும்பல் சூழ்ந்து அவரிடம் இருந்த மொபைல் போன், 4600 ரூபாய் ஆகியவற்றை வழிப்பறி செய்து தப்பியது. அந்த வாலிபர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சரவணம்பட்டி, கவுதீஸ்வரன், 23. மாதன், 18. மற்றும், நான்கு சிறுவர்களையும் கைது செய்தனர்.
பணத்தையும் மொபைல் போனையும் மீட்டனர். கவுதீஸ்வரன் மீது ஏற்கனவே சரவணம்பட்டி மற்றும் திருப்பூரில் மூன்று வழக்குகள் உள்ளன. சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில், 'செயலியை பயன்படுத்தி தனியாக வரச் சொல்லி அழைத்தால் செல்ல வேண்டாம். அவர்கள் பணம் பறிக்கும் கும்பலாக இருக்கக்கூடும்.
செயலி மூலம் தொடர்பு கொண்டு வரும்படி கூறினால் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கலாம்,' என்றனர்.