Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'நகராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு அதிகம்' : தி.மு.க. கவுன்சிலர்கள் புகார்

'நகராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு அதிகம்' : தி.மு.க. கவுன்சிலர்கள் புகார்

'நகராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு அதிகம்' : தி.மு.க. கவுன்சிலர்கள் புகார்

'நகராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு அதிகம்' : தி.மு.க. கவுன்சிலர்கள் புகார்

UPDATED : செப் 30, 2025 12:43 AMADDED : செப் 30, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்; 'நகராட்சி நிர்வாகத்தில், தலைவரின் கணவர் தலையீடு அதிகம் உள்ளது' என்று நகர் மன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் கூறினார்கள்.

கோவை மாவட்டம் காரமடை நகர் மன்ற கூட்டம் நேற்று நகராட்சி தலைவர் உஷா (தி.மு.க) தலைமையில், நகராட்சி கமிஷனர் மதுமதி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:

வனிதா (அ.தி.மு.க.)- ஆட்டோமேட்டிக் ஸ்விட்ச் தெரு விளக்குகளில் எப்போது பொருத்தப்படும். காரமடை ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் தேங்குகிறது.

அதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் அரங்கநாதர் கோவிலுக்கு அதிகப்படியான கூட்டம் வருகிறது. மேம்பாலம் மீது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தண்ணீரை வெளியேற்றினால் பக்தர்கள் அவ்வழியாக செல்ல வசதியாக இருக்கும்.

இதற்கு பதில் அளித்து பேசிய கமிஷனர் மதுமதி, சுரங்க பாதை இன்னமும் நெடுஞ்சாலை துறையினர் வசம் தான் உள்ளது. நம்மிடம் ஒப்படைக்கும் போது அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

பிரியா (மா.கம்யூ.)- எனது வார்டில் தண்ணீர் பிரச்னை உள்ளது. அடிக்கடி தண்ணீர் விநியோகிக்க தேவைப்படும் மோட்டார்களில் பழுது ஏற்படுகிறது. அதற்கு தேவைப்படும் மோட்டார்கள் கேட்டு சுமார் 1 ஆண்டிற்கும் மேல் போராடி வருகிறேன்.

எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.

பின் இதற்கு தீர்வு காண வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார்.

இதே போல் தனது வார்டுகளிலும் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என கூறி ம.தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் கவிதாவும் தர்ணாவில் ஈடுபட்டார்.

குருபிரசாத் (தி.மு.க.) -மாதம் ஒரு முறை கூட்டம் நடத்தினால் தான் எங்களது வார்டு பிரச்சனைகளை பற்றி பேச முடியும். அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களிடம் நகராட்சி தலைவரின் கணவர், பேசக்கூடாது, கோரிக்கை வைத்தால் செய்யக்கூடாது என சொல்லியுள்ளார்.

தியாகராஜன் (தி.மு.க.) நகராட்சி நிர்வாகத்தில், நகராட்சி தலைவரின் கணவர் தலையீடு அதிகமாக உள்ளது. தொடர்ந்து கவுன்சிலர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டால், தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம். கவுன்சிலர்கள் ராஜினாமா செய்வோம்.

பிரியா ( தி.மு.க.)- குடிநீர் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வாங்கப்படுகிறது. அதற்கான பில்கள் தரப்படுவதில்லை. செலவுகளை கணக்கிட்டால் சுமார் ரூ.2,450 வரை தான் வருகிறது. ஆனால் ரூ.5 ஆயிரம் வரை வாங்கப்படுகிறது. அந்த பணம் எங்குசெல்கிறது. இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us