Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முதல்வர் அறிவித்தும் கொள்முதல் விலை உயரலை; பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

முதல்வர் அறிவித்தும் கொள்முதல் விலை உயரலை; பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

முதல்வர் அறிவித்தும் கொள்முதல் விலை உயரலை; பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

முதல்வர் அறிவித்தும் கொள்முதல் விலை உயரலை; பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

ADDED : ஜன 02, 2024 11:05 PM


Google News
அன்னுார்;'முதல்வர் அறிவித்து 20 நாட்கள் ஆகியும் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை,' என பால் உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் தினமும் நான்கு லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது.

மாட்டு தீவனம் விலை உயர்வு காரணமாக பால் கொள்முதல் விலை கட்டுபடியாகவில்லை என பால் உற்பத்தியாளர்கள் பல போராட்டங்களை அறிவித்தனர்.

இந்நிலையில், கடந்த டிச. 13ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'டிச. 18ம் தேதி முதல் பசும்பால் கொள் முதல் விலை ஒரு லிட்டருக்கு 35 ரூபாயில் இருந்து 38 ரூபாயாகவும், எருமைப்பால் விலை 44 ரூபாய் முதல் 47 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள்,' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அன்னூர் வட்டார பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'பால் ஒரு லிட்டர் 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்தால் மட்டுமே கட்டுபடியாகும். எனினும் மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது நஷ்டத்தை குறைக்க உதவும்.

எனவே, முதல்வர் அறிவிப்பை வரவேற்று ஆவினுக்கு கூடுதலாக பால் ஊற்றி வந்தோம். ஆனால் முதல்வர் அறிவித்து 20 நாட்கள் ஆகி விட்டது.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கேட்டால், எங்களுக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை. எனவே பழைய தொகை மட்டுமே தர முடியும் என்று கூறுகின்றனர்.

10 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யும் பாலுக்கு 12வது நாள் வங்கிக் கணக்கில் பணம் தருகின்றனர். கடந்த 31ம் தேதி வரை நாங்கள் வழங்கிய பாலுக்கு பழைய விலையான லிட்டருக்கு 35 ரூபாயும், கொழுப்பு குறைவாக உள்ள பாலுக்கு 32 ரூபாயும் கணக்கிட்டு இன்று (நேற்று) வழங்கப்பட்டது.

முதல்வர் அறிவிப்பை ஆவின் அதிகாரிகள் அமல்படுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது. உடனடியாக ஆவின் நிர்வாகம் முதல்வர் அறிவிப்புக்கேற்ப பால் கொள்முதல் விலையை அதிகரித்து தர வேண்டும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us