Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பசுமை பரப்பை அதிகரிக்கும் திட்டம் நடக்குமா? சுயநலத்துக்காக வெட்டப்படும் மரங்கள்

பசுமை பரப்பை அதிகரிக்கும் திட்டம் நடக்குமா? சுயநலத்துக்காக வெட்டப்படும் மரங்கள்

பசுமை பரப்பை அதிகரிக்கும் திட்டம் நடக்குமா? சுயநலத்துக்காக வெட்டப்படும் மரங்கள்

பசுமை பரப்பை அதிகரிக்கும் திட்டம் நடக்குமா? சுயநலத்துக்காக வெட்டப்படும் மரங்கள்

ADDED : செப் 30, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
கோவை; கோவை மாநகராட்சி பகுதிகளில், பசுமை பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நடுவது ஒருபுறம் இருந்தாலும், சுயநலத்துக்காக தனியாரால் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவது அதிகரித்துள்ளது. இது, பசுமை திட்டத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழகத்தில் பசுமை பரப்பை, 33 சதவீதமாக அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இதுவரை நடப்பட்டுள்ளன. சமீபத்தில், மாநகராட்சி சார்பில் பசுமை தோட்டங்கள் அமைப்பது குறித்த இரு நாள் விழிப்புணர்வு கண்காட்சி, ரேஸ்கோர்ஸில் நடத்தப்பட்டது.

மூன்று ஆண்டுக்கு முன், வார்டுக்கு ஒன்று வீதம், 100 வார்டுகளில் 'மியாவாக்கி' முறையில் அடர்வனம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன. தவிர, பொது ஒதுக்கீட்டு இடம், ரோட்டின் ஓரங்களிலும்மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

சுயநலத்துக்கு துண்டிப்பு இதுபோன்ற நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, சுயநலத்துக்காக மரங்கள் வெட்டப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. 'வீட்டுக்குள் மரங்களின் இலைகள் உதிர்கின்றன; பூச்சிகள் தொல்லை; கடைகளின் முகப்பை கிளைகள் மறைக்கின்றன' போன்ற சின்ன சின்ன காரணங்களுக்காகமரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன.

ஆசிட் ஊற்றி கொலை சிலர் மரங்களின் வேர்களில், 'ஆசிட்' ஊற்றி கருணையின்றி அழிப்பதும் தொடர்கிறது. நேற்று, மாநகராட்சி, 41வது வார்டு, மருதமலை ரோடு,பி.என்.புதுார், தபால் நிலையம் அருகே, 10 சென்ட் இடத்தில் அமைக்கப்பட்ட 'மியாவாக்கி' அடவர்னத்தில் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டது, சூழல் ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதி மக்கள் கூறியதாவது:

மாநகராட்சிக்கு சொந்தமான, 10 சென்ட்டுக்கும் அதிகமான இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் 'மியாவாக்கி' முறையில் நட்ட மரக்கன்றுகள் பெரிதாக வளர்ந்து விட்டன. இவற்றை தினமும் தண்ணீர் ஊற்றியும், புதர் மண்டாமலும் பராமரித்து வருகிறோம்.

இன்று (நேற்று) காலை சிலர், இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் மரங்களை வெட்டுவதைஅறிந்து தடுத்து நிறுத்தினோம்.மருதமலை ரோடு, பெருமாள் கோவில் பஸ்ஸ்டாப் அருகே, பைமெட்டல் ரோடு உள்ளிட்ட இடங்களில் மரங்கள் நடப்பட்டன.

அவற்றை தனியார் வளர விடவில்லை. மாநகராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டாலும், சுயநலத்துக்காக மரங்களை அழிப்பது வேதனைக்குரியது. அதுவும் ஆசிட் ஊற்றி அழிப்பது கொடூரமானது. அத்துமீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மாநகராட்சி பகுதிகளில் இது தொடர்கதையாக இருப்பதால், கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

'நடவடிக்கை பாயும்' மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விசாரித்து அறிக்கை தர உதவி பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மரங்களை வெட்டுவோர் குறித்து போலீசாரிடம் புகார் அளிப்பதுடன், அபராத நடவடிக்கை எடுக்கப்படும். - துரைமுருகன் உதவி கமிஷனர், மாநகராட்சி மேற்கு மண்டலம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us