Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நம்ம பள்ளி.. நம்ம வாத்தியார்... திறமையான ஆசிரியர்களால் உயர் பதவிகளில் சாதனை குள்ளஞ்சாவடி அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் அசத்தல்

நம்ம பள்ளி.. நம்ம வாத்தியார்... திறமையான ஆசிரியர்களால் உயர் பதவிகளில் சாதனை குள்ளஞ்சாவடி அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் அசத்தல்

நம்ம பள்ளி.. நம்ம வாத்தியார்... திறமையான ஆசிரியர்களால் உயர் பதவிகளில் சாதனை குள்ளஞ்சாவடி அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் அசத்தல்

நம்ம பள்ளி.. நம்ம வாத்தியார்... திறமையான ஆசிரியர்களால் உயர் பதவிகளில் சாதனை குள்ளஞ்சாவடி அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் அசத்தல்

ADDED : மே 25, 2025 02:52 AM


Google News
Latest Tamil News
குறிஞ்சிப்பாடி அடுத்த குள்ளஞ்சாவடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி துவங்கி 65 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இங்கு, 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளன. பள்ளியில் 30 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.

இப்பகுதியில் தனியார் பள்ளிகள் துவங்குவதற்கு முன்பு அரசு மேல்நிலைப்பள்ளி தான் தனிப்பெரும்பான்மையுடன் திகழ்ந்தது. பொது நலன் கருதி செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் மூலமாக ரெடிமேடு கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

புதியதாக சி பாடப்பிரிவில் வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய பாடங்கள் துவக்கப்பட்டன.

இப்பள்ளி மாணவிகள் இதுவரை குறிஞ்சிப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தான் மேல்நிலை பொதுத்தேர்வு எழுதும் நிலை இருந்தது.

தலைமை ஆசிரியர் கொளஞ்சிப்பன் மேற்கொண்ட முயற்சி காரணமாக குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வை குள்ளஞ்சாவடி பள்ளியிலே எழுதும் நிலை கிடைக்கப்பெற்றது.

கலை ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகளை கண்டறிந்து மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவிலும் ஆசிரியர்கள் தயார்படுத்தியுள்ளனர். கொரோனா தொற்று காலங்களில் முறையான அனுமதி பெற்று கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இதன் பயனாக மாணவ, மாணவிகள் கொரானா தொற்றை எச்சரிக்கையாக கையாண்டனர்.

பள்ளியில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களை கண்டறிந்து தேவையான கல்வி உபகரணங்களை வெளியில் இருந்து பெற்று வழங்கப்பட்டுள்ளது. 'வள்ளலார்- 200' என்ற மாபெரும் திருவிழாவை ஆசிரிய, ஆசிரியைகள் சிறப்பாக நடத்தி அனைவரின் பாராட்டை பெற்றனர். திறமையான ஆசிரியர்களின் பயிற்றுதலால் இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் பல உயர் பதவிகளில் பணிபுரிகின்றனர்.

ஆசிரியர்கள் ஒத்துழைப்பு


தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் கூறியதாவது:

கடந்த 25 ஆண்டு களுக்கும் மேலாக முதுகலை ஆங்கில ஆசிரியராக உள்ளேன். 2017ல் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, 2019ம் ஆண்டு முதல் குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களை கட்டுப்பாடுடனும், ஒழுக்கத்துடனும் உருவாக்கி வருகிறோம். தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற போது மாணவர்களுக்கான கழிவறை இல்லாமல் இருந்தது. கடலுார் இன்னர்வீல்ஸ் அறக்கட்டளை உதவியுடன் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவறை அமைக்கப்பட்டது.

தற்போது அரசு திட்டத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் 7 வகுப்பறை, அறிவியல் ஆய்வகம், ஆண், பெண் கழிவறை வசதியுடன் புதிய கட்டடம் கட்டி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், சொந்த செலவில் இன்வெர்ட்டர் அமைத்துக் கொடுத்தார். உள்ளூர் நன்கொடையாளர்களின் உதவியுடன் பள்ளியின் தேவைகள் நிறைவேற்றப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசுப் பள்ளிகளில் மன அழுத்த மேலாண்மை மற்றும் அடிப்படை தியானம் குறித்து பயிற்சி அளித்து வருகிறேன். இலவச உயர்கல்வி வழிகாட்டுதல் மையம் மூலம் பிளஸ் 2 விற்குப் பின் மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்த ஆலோசனை வழங்கி வருகிறேன்.

சாய்ராம் பொறியியல் கல்லுாரியின் சிறந்த ஆசிரியருக்கான விருது, புத்தனாம்பட்டி நேரு கலை, அறிவியல் கல்லுாரியின் விருது, அரிமா மற்றும் ரோட்டரி சங்கங்களின் கல்விப்பணிக்கான விருது, 2023-24ம் ஆண்டு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றேன்.

விளையாட்டு மைதானம் தேவை


பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் கூறியதாவது:

இப்பள்ளி 1964 -65ம் ஆண்டில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்போடு துவக்கப்பள்ளியாக துவங்கப்பட்டது. இன்று மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது. தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சியால், பள்ளிக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு மாணவர்களின் கல்விக்கு பேருதவியாக உள்ளது. மாணவர்களின் சேர்க்கை விகிதம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டுகளை விட உயர்ந்துள்ளது.

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் மாணவர்களை உருவாக்கி வருகின்றனர். பண்ருட்டி எம்.எல்.ஏ.,வேல்முருகன், அவரது சகோதரர் திருமால்வளவன் ஆகியோர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.

பள்ளியில் மைதானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் விளையாட்டிலும் மாணவர்கள் சாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பெருமை சேர்க்கும் ஆசிரியர்கள்


முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்வம் கூறியதாவது:

கடந்த 2000ம் ஆண்டு இங்கு 10ம் வகுப்பு படித்தேன். மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் மேல்நிலைக்கல்வி படிக்க உதவியாக உள்ளது.

என்னுடன் படித்த மாணவர்கள் பலர் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்களாக உள்ளனர்.

வார்டு உறுப்பினராக இருந்த போது, பள்ளி விழாக்களில் பங்கேற்றதும் பள்ளிக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆசிரியர்கள் மாணவர்களை சிறப்பான முறையில் பயிற்சி கொடுத்து சிறந்த மதிப்பெண் பெறச்செய்து பள்ளிக்கு பெருமை சேர்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us