Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் பாரபட்சம்; விருதை தொகுதி காங்., கட்சியினர் வேதனை

ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் பாரபட்சம்; விருதை தொகுதி காங்., கட்சியினர் வேதனை

ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் பாரபட்சம்; விருதை தொகுதி காங்., கட்சியினர் வேதனை

ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் பாரபட்சம்; விருதை தொகுதி காங்., கட்சியினர் வேதனை

ADDED : அக் 08, 2025 12:07 AM


Google News
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த தி.மு.க., பலமான கூட்டணியுடன் களமிறங்கியது. அதில், கூட்டணி கட்சியான காங்., 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது.

அதில், தி.மு.க.,வினர் எதிர்பார்த்த தொகுதிகளும் அடங்கும். குறிப்பாக, விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாவட்ட செயலாளர் கணேசன் ஆதரவு பெற்ற நபர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில், விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்கு ஆளுங்கட்சி போதுமான நிதியை ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், விருத்தாசலம் சட்டசபை தொகுதியை புறக்கணித்து விட்டதாக காங்., கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இது, சிட்டிங் காங்., எம்.எல்.ஏ.,வுக்கு தொகுதி மக்களிடம் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து காங்., கட்சியினர் கூறுகையில், 'முதல்வரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அனைத்து தொகுதிக்கும் நிதி ஒதுக்குவது வழக்கம். கடலுார் மேற்கு மாவட்டத்தில் அமைச்சர் கணேசனின் சொந்த தொகுதியான திட்டக்குடியில், 100 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. தற்போது, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 7 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதே போன்று, நெய்வேலி மற்றும் பண்ருட்டி தொகுதிகளிலும் 4, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், விருத்தாசலம் தொகுதிக்கு மட்டும் ஒரு லட்சத்திற்கு கூட வேலை தரவில்லை. இது மாற்றாந்தாய் மனப்பக்குவத்தை காட்டுகிறது.

ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருந்தும், இதுபோன்ற பாரபட்சம் காங்., கட்சியினரிடம் ஏமாற்றத்தை தருகிறது. கடந்த பிப்., மாதம் கடலுாரில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் 600 கோடி ரூபாயில் வளர்ச்சிப் பணிகளை அறிவித்துச் சென்றார்.

அதிலும் 1 லட்சம் ரூபாய்க்கு கூட விருத்தாசலம் தொகுதிக்கு நிதி வழங்கவில்லை. இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சட்டசபையில் பேசியதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளுங்கட்சி ஓரவஞ்சனையாக செயல்படுவதால், மேற்கு மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் விருத்தாசலம் மட்டும் தாயில்லா பிள்ளையாக தவிக்கிறது' என்றனர்.

இதுகுறித்து அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கூறுகையில், 'அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us