Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தொப்பூர் கணவாயில் நடந்த கோர விபத்து: லாரி, கார் தீப்பற்றி எரிந்ததில் 4 பேர் பலி

தொப்பூர் கணவாயில் நடந்த கோர விபத்து: லாரி, கார் தீப்பற்றி எரிந்ததில் 4 பேர் பலி

தொப்பூர் கணவாயில் நடந்த கோர விபத்து: லாரி, கார் தீப்பற்றி எரிந்ததில் 4 பேர் பலி

தொப்பூர் கணவாயில் நடந்த கோர விபத்து: லாரி, கார் தீப்பற்றி எரிந்ததில் 4 பேர் பலி

ADDED : ஜன 25, 2024 10:44 AM


Google News
Latest Tamil News
தொப்பூர்: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் நெல் லோடு ஏற்றி சென்ற லாரி, 2 லாரிகள் மற்றும், 2 கார்கள் மீது மோதியதில், லாரி மற்றும் கார்கள் தீப்பற்றி எரிந்த விபத்தில், 4 பேர் பலியாகினர்.

கர்நாடகா மாநிலத்திலிருந்து சேலத்தை நோக்கி, நெல்மூடைகள் ஏற்றிய லாரி, தொப்பூர் வழியாக நேற்று மாலை சென்றது. தொப்பூர் இரட்டை பாலத்தின் மீது லாரி சென்று கொண்டிருந்தபோது, நெல் மூடை ஏற்றிச்சென்ற லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்ற பார்சல் சர்வீஸ் கன்டெய்னர் லாரி மீது மோதியது. அந்த லாரி, அதற்கு முன்னால் கெமிக்கல் மூட்டை பாரத்துடன் சென்ற லாரி மீது மோதியதில், கெமிக்கல் மூட்டை பாரம் ஏற்றிச்சென்ற லாரி, இரட்டை பாலத்தின் நடுவே உள்ள இடைவெளி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதற்கிடையில், நெல் பாரம் ஏற்றிய லாரி, 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், ஒரு கார், லாரியின் அடியில் சிக்கியது. அப்போது லாரியில் பற்றிய தீயில் கார், லாரி இரண்டும் எரியத் தொடங்கின. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தர்மபுரி தீயணைப்பு துறையினர் மற்றும் தொப்பூர், அதியமான்கோட்டை போலீசார், வாகனங்களில் சிக்கி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய, 4 பேரை மீட்டு தர்மபுரி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், தீயில் கருகிய நிலையில், 3 பேரின் சடலத்தை மீட்டனர்-

இந்த விபத்தில், கெமிக்கல் மூட்டை பாரத்துடன் பாலத்தின் இடைவெளி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி டிரைவர் படுகாயமடைந்தார். மற்றொரு காரில் இருந்த, நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியை சேர்ந்த இளங்கோ, சதீஷ், நாமக்கல்லை சேர்ந்த கந்தசாமி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

லாரிக்கு அடியில் சிக்கி தீப்பற்றிய காரில், கோவையை சேர்ந்த விமல்குமார், 30, அவர் மனைவி அனுஷ்கா, 22, ஜெனிபர், 30, மஞ்சுளா, 45, உள்ளிட்ட, 8 பேர் பயணித்துள்ளார். இவர்களில், விமல்குமார், அனுஷ்கா, மஞ்சுளா ஆகிய, 3 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்தனர்.

விபத்தில் காயமடைந்த, 7 பேர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ஜெனிபர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் விபத்தில் காயமடைந்த, தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த சின்ராஜ் மகன் ஸ்ரீதர், 25, இடைப்பாடியை சேர்ந்த சீனிவாசன் ஸ்ரீகாந்த், 20, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அனீஷ், 40, மற்றும் இரு பெண் குழந்தைகள், 10 வயது சிறுவன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செந்தில், 52, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நடந்த இடத்தை, சேலம் டி.ஐ.ஜி., உமா மகேஸ்வரி, தர்மபுரி கலெக்டர் சாந்தி, எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த விபத்தால் தொப்பூர் மலைப்பாதையில், 8 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கடந்த, 2020-ம் ஆண்டு டிச., 12-ம் தேதி மதியம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தில் வேலுார் மாவட்டத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி, 12 கார்கள், ஒரு மினி லாரி, ஒரு பைக் ஆகியவற்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், கார்களில் சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர் என, 5 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us