Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விஜயபாஸ்கர் உறவினர், கான்ட்ராக்டர் வீடு, அலுவலகத்தில் போலீஸ் 'ரெய்டு'

விஜயபாஸ்கர் உறவினர், கான்ட்ராக்டர் வீடு, அலுவலகத்தில் போலீஸ் 'ரெய்டு'

விஜயபாஸ்கர் உறவினர், கான்ட்ராக்டர் வீடு, அலுவலகத்தில் போலீஸ் 'ரெய்டு'

விஜயபாஸ்கர் உறவினர், கான்ட்ராக்டர் வீடு, அலுவலகத்தில் போலீஸ் 'ரெய்டு'

ADDED : ஆக 05, 2024 06:31 PM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்:கரூரில் நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறவினர் ஆலை, திண்டுக்கல் அரசு ஒப்பந்த பணி அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்லிலிருந்து பரிமாற்றம் செய்த தகவல் தெரிய வந்ததை அடுத்து, கரூர் சி.பி.சி.ஐ.டி., போலீசார், திண்டுக்கல் வருவாய் அதிகாரிகளோடு இணைந்து, திண்டுக்கல் முனிசிபல் காலனியில் உள்ள அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளும் தனியார் அலுவலகத்தில், காலை 10:00 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். மதியம் 1:30 மணி வரை நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

தாடிக்கொம்பு, குஜிலியம்பாறை பகுதிகளில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறவினர் நுாற்பாலைகள் என மூன்று இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் - திருச்சி சாலை, கணேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 55. இவர், நாமக்கல் - சேலம் சாலையில், கட்டுமான நிறுவனம் நடத்துகிறார். மேலும், பெரியமணலி அருகே கிரஷர் தொழிற்சாலையும் நடத்துகிறார். நேற்று காலை, 11:00 மணிக்கு, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், நாமக்கல், கரூர் சி.பி.சி.ஐ.டி., போலீசார், நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள பாலகிருஷ்ணனின் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்குள்ள கோப்புகள், வங்கி கணக்குகள், கம்ப்யூட்டர் பதிவுகளை போலீசார் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து, பாலகிருஷ்ணனை, நாமக்கல் - மோகனுார் சாலை கலைவாணி நகரில் தற்போது வசித்து வரும் வீட்டிற்கு அழைத்துச்சென்று, அங்கும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலகிருஷ்ணன், சென்னையில் ஒப்பந்த அடிப்படையில், அரசு துறைகளுக்கு கட்டடங்களை கட்டிக்கொடுக்கிறார். மேலும், நிலமோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என, கூறப்படுகிறது.

சோதனை, மாலை, 4:00 மணிக்கு முடிந்தது. அப்போது, பல்வேறு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனையின் போது, நாமக்கல் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us