Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இனிப்பு காரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

இனிப்பு காரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

இனிப்பு காரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

இனிப்பு காரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

ADDED : அக் 12, 2025 04:26 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, காரம் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

பேக்கரி, ஸ்வீட் ஸ்டால் வைத்துள்ளவர்கள், வீடு அல்லது மண்டபத்தில் இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்வர்கள், 'எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,' என்ற சான்றிதழை 'போகஸ்' இணையதளம் மூலம் பெற்றிருக்க வேண்டும். தரமான உணவு உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து மூலப்பொருட்களை வாங்க வேண்டும். நெய் மற்றும் பால் சார்ந்த இனிப்புகளை தனி தனியாக 'பேக்' செய்ய வேண்டும்.

இனிப்பு மற்றும் காரப்பொருட்களில், எந்த சமையல் எண்ணெயில் தயாரிக்கப்பட்டது, உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அல்லது இந்த தேதிக்கு முன் பயன்படுத்துவது சிறந்தது ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், செய்தித்தாளில் 'பேக்கிங்' செய்யக்கூடாது.

பயன்படுத்திய எண்ணெயை உணவு பாதுகாப்பு ஆணையரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எண்ணெய் முகவரிடம் கொடுக்க வேண்டும். உணவு பொருட்களில் கலப்படம் அல்லது குறைகள் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும்.

உணவு வண்ணங்களை அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட அல்லது அதிகளவிலான வண்ணங்களை பயன்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

உணவு கையாளுபவர்கள் 'போஸ்டேக்' பயிற்சியும், குடல் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நீர் 'ஐ.எஸ்.ஓ.,' 10500ன் படி பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். தயாரிப்புகளின் தன்மைக்கு ஏற்ப சரியான வெப்பநிலை பராமரிக்கப்பட வேண்டும்.

ரசமலாய், ரசகுல்லா போன்ற உணவு பொருட்களை தயாரிக்கும் தினத்தன்றே சாப்பிட வேண்டும். பால் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகைகளை 3 - 4 நாட்களிலும், முந்திரி கொண்டு செய்யப்படும் இனிப்பு வகைகளை 7 நாட்களிலும் பயன்படுத்த வேண்டும்.

மற்ற பலகாரங்களை 15 நாட்களில் பயன்படுத்த வேண்டும். உணவு பொருட்களின் தன்மை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் 94440-42322 என்ற உணவு பாதுகாப்பு துறையின் புகார் எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us