Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சேராப்பட்டில் காவல் நிலையம் அமைக்கப்படுமா?: மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு

சேராப்பட்டில் காவல் நிலையம் அமைக்கப்படுமா?: மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு

சேராப்பட்டில் காவல் நிலையம் அமைக்கப்படுமா?: மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு

சேராப்பட்டில் காவல் நிலையம் அமைக்கப்படுமா?: மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : பிப் 02, 2024 04:06 AM


Google News
கள்ளக்குறிச்சி:கல்வராயன்மலையில் மலைவாழ் மக்களின் சிரமங்களைப் போக்கும் வகையில், சேராப்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கல்வராயன்மலை 45 ஆயிரத்து 225 எக்டேர் பரப்பளவும், 3,000 அடி உயரமும் கொண்டுள்ளது. கல்வராயன்மலை ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளை உள்ளடக்கி, 50 வருவாய் கிராமம் உட்பட, 177 கிராமங்கள் உள்ளன. இங்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

மாவட்டம் உதயமான பின் புதிய தாலுகாவாகவும் இயங்குகிறது. கரியாலுார் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 14 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலைய சுற்று வட்டாரத்தின் எல்லைகள் 70 கி.மீ., தொலைவில் முடிவடைகிறது.

இதனால், மலைவாழ் மக்கள், காவல் நிலையத்தில் புகார் அளிக்க கடும் சிரமத்துடன் செல்லும் சூழ்நிலை உள்ளது.

இதற்கிடையே பல கிராமங்கள் காவல் நிலையத்தில் இருந்து பல கி.மீ., தொலைவில் உள்ளன. இதனால் புகார் தொடர்பாக சம்பவ இடத்திற்கு போலீசார் உடனடியாக நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள முடிவதில்லை. இரவு நேரங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. கடும் சிரமங்களால் பெரும்பாலானோர் புகார் அளிப்பதில்லை.

கிராமத்தில் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் மற்றும் சாலை விபத்து, கிராமங்களில் தகராறு போன்ற பல்வேறு பிரச்னைக்கு உடனடியாக புகார் அளிக்க முடியாமல் போகிறது. போதிய போக்குவரத்து வசதியும் இல்லை.

கல்வராயன்மலையில் பெரியார், மேகம், கவ்வியம், வெள்ளி மலை, சிறுக்கலுார் அருவிகள் உள்ளன.

அருவிகளில் குளிக்கவும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகளைப் பார்க்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சில நேரங்களில் ஆறு மற்றும் அருவிகளில் இளைஞர்கள் குளிக்கும் போது தவறி விழுந்து இறக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது. அத்தருணத்தில் வழக்கு பதிந்து அவர்களின் உடலை தேடி கண்டுபிடிப்பதற்கு போலீசார் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். கல்வராயன்மலையில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலைகளின் நடுவே கள்ளச்சாராயம் காய்ச்சபடும் இடங்களை கண்டறிந்து அழிப்பதற்கும் போலீசார் கடும் சிரமம் அடைகின்றனர்.

மலையில் சாராயம் விற்பனை மற்றும் காய்ச்சுவதைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது என்பது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.

மலை கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு உரிய போலீசார் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

கடும் பணிச்சுமையால் போலீசார் சிரமப்படுகின்றனர். காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் மலைவாழ் மக்களுக்கும் உடனடியாக தீர்வும் கிடைப்பதில்லை.

எனவே, மலைவாழ் மக்களின் சிரமத்தைப் போக்க கரியாலுார் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, சேராப்பட்டு பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

அவ்வாறு காவல் நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில், பெரும்பாலான மலைவாழ் கிராம மக்களுக்கு பெரும் பயனாக அமையும். இதற்கு காவல் துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us