Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/செய்யாறு அணைக்கட்டு சீரமைக்க ரூ.18 கோடி... ஒதுக்கீடு: 40 கிராமங்களில் 2,000 ஏக்கர் விளைநிலங்கள் பயன்

செய்யாறு அணைக்கட்டு சீரமைக்க ரூ.18 கோடி... ஒதுக்கீடு: 40 கிராமங்களில் 2,000 ஏக்கர் விளைநிலங்கள் பயன்

செய்யாறு அணைக்கட்டு சீரமைக்க ரூ.18 கோடி... ஒதுக்கீடு: 40 கிராமங்களில் 2,000 ஏக்கர் விளைநிலங்கள் பயன்

செய்யாறு அணைக்கட்டு சீரமைக்க ரூ.18 கோடி... ஒதுக்கீடு: 40 கிராமங்களில் 2,000 ஏக்கர் விளைநிலங்கள் பயன்

ADDED : மார் 26, 2025 07:10 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், வெங்கச்சேரி கிராமத்தில், செய்யாற்றின் குறுக்கே சேதமான அணைக்கட்டு சீரமைக்க, நீர்வள ஆதாரத் துறை 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் 40 கிராமங்களில், 2,000 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும்.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு குறுக்கே, 8 கோடி ரூபாய் மதிப்பில், வெங்கச்சேரி கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே, 2017ல், புதிதாக அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டின் ஷட்டரில் இருந்து வெளியேறும் தண்ணீர், நீர் வரத்து கால்வாய் வாயிலாக, காவாந்தண்டலம் ஏரிக்கு சீராக செல்லும் வகையில் கட்டப்பட்டது.

இந்த அணைக்கட்டு வாயிலாக, காவாண்தண்டலம் ஏரிக்கு, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், பக்கவாட்டு கால்வாய் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

மாகரல் கிராமம் அருகே, 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், நிலத்தடி நீரை உயர்த்தவும் இந்த அணைக்கட்டு வாயிலாக பயன்பெற முடிந்தது.

இந்நிலையில், 2021ல் பெய்த கனமழை காரணமாக, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அணைக்கட்டின் அடிப்பகுதி சேதமானது. கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளிலேயே அணைக்கட்டின் அடிப்பகுதி சேதம் ஆனதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி கொட்டும் இடத்தில், கற்கள் பெயர்ந்து மோசமாக காட்சியளித்தன. அணைக்கட்டில் தண்ணீர் தேக்கவும் முடியவில்லை.

இதுமட்டுமட்டுமல்லாமல், காவாந்தண்டலம் ஏரிக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. ஏரிக்கு செல்லும் கால்வாயில் பெரிய அளவிலான துவாரங்கள் உள்ளன. கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள், கால்வாயின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஏரிக்கு செல்லும் தண்ணீர், மீண்டும் ஆற்றிலேயே வடிகிறது.

காவாண்தண்டலம் ஏரிக்கு புதியதாக கால்வாய் கட்டவும், சேதமான அணைக்கட்டை சீரமைக்கவும், தமிழக அரசிடம் மொத்தம் 18 கோடி ரூபாய் கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத் துறையினர் மூன்று ஆண்டுகளுக்கு முன் கருத்துரு அனுப்பியுள்ளனர்.

ஆனால், நீர்வளத் துறை நிதி ஒதுக்கீடு வழங்காததால், கால்வாய் கட்டாமலும், அணைக்கட்டு சீரமைக்க முடியாத நிலை தொடர்ந்தது. ஆண்டுதோறும் காவாந்தண்டலம் ஏரியை நிரப்ப முடியாமல், விவசாயிகள் கடும் சிரமப்பட்டனர். இரு ஆண்டுகளுக்கு முன்பாக, உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் அறிவிப்பு வெளியிட்டனர். விவசாயிகளை ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் பேசி சமாளித்து வந்தனர்.

கடந்தாண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், நீர்வளத் துறை மானிய கோரிக்கை அறிவிப்பின்போது, செய்யாறு அணைக்கட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் சட்டசபை தொடரில், மானிய கோரிக்கை அறிவிப்பின்போது, செய்யாறு அணைக்கட்டுக்கு நிதி ஒதுக்குவார்களா என, விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

ஒருவழியாக, செய்யாறு அணைக்கட்டு சீரமைக்கவும், காவாந்தண்டலம் ஏரிக்கு செல்லும் பிரதான கால்வாயை கட்டவும், 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனால், அணைக்கட்டு சீரமைப்புக்கு பின், காவாந்தண்டலம் சுற்றியுள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'சட்டசபை அறிவிப்பை தொடர்ந்து, அணைக்கட்டு சீரமைப்பு மற்றும் கால்வாய் கட்ட அரசாணை பெற வேண்டும். அதைத் தொடர்ந்து டெண்டர் விட்டு, பணிகளை துவக்க வேண்டும்' என்றார்.

ஏரிகள் சீரமைப்புக்கு

ரூ.7 கோடி ஒதுக்கீடுகாஞ்சிபுரம் மாவட்டத்தில், வெள்ள தடுப்பு பணிக்காக, குன்றத்துார் தாலுகாவில், சில பணிகள் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தாமல் ஏரியின் மதகு 6ல், ஏரிக்கரையின் பின்பகுதியில், பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணியை, 6 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவிந்தவாடி கிராமத்தில், பெரியி ஏரி மற்றும் சிற்றேரியை சீரமைக்க, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



பாலாறு தடுப்பணைஅறிவிக்காததால் ஏமாற்றம்


சட்டசபை கூட்டத் தொடரிலில், உத்திரமேரூர் தொகுதி தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், 70 கோடி ரூபாய் மதிப்பில், பாலாற்றின் குறுக்கே அவலுாரில் தடுப்பணை கட்ட முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனால், மானிய கோரிக்கை அறிவிப்பின்போது, அவலுாரில் தடுப்பணை கட்ட 70 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாலாறு தடுப்பணைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது, விவசாயிகளுக்கு மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us