ADDED : மே 08, 2026 03:01 AM

கரூர்:கரூர் மாவட்டத்தில் அமராவதி, காவிரி பாசன பகுதிகளில் நெல், சோளம் உள்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால், உழவு பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:கோடை உழவை, மானாவாரி நிலத்தில் மட்டுமே செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணம் பரவலாக உள்ளது. அனைத்து நிலங்களிலும் கோடை உழவு செய்வது அவசியம். காவிரி பாசன பகுதியில் பெரும் பகுதி களி மண்ணாக உள்ளது. நெல் அறுவடைக்கு பின், களிமண் சுருங்குவதால் ஆழமான வெடிப்பு, ஏற்பட்டு நிலத்தின் அடி மண்ணின் ஈரம் ஆவியாகிறது.மேலும் 4, 5 மாதங்கள் கழித்து இந்த நிலத்தை நெல் சாகுபடி செய்ய, நீர் பாய்ச்சும் போது நீர் வேர் உறிஞ்சும் மட்டத்திற்கு கீழே சென்று விடுகிறது. மேலும் உழவின் போது கட்டிகள் பெரிதாக உடைந்து, வளமான மேல் மண் வெடிப்பு வழியாக அடிமட்டத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. நிலத்தை தயார் செய்ய அதிகளவு கால்வாய் நீர் தேவைப்படுகிறது. நீர் விரயமாவதுடன் நிலம் தயார் செய்ய தேவைப்படும் நாள்களும் அதிகமாகின்றன.முன்பருவ விதைப்புஇவற்றையெல்லாம் நீக்கி, மண் வளத்தை காக்கவும், நடவு நிலத்தை தயார் செய்யவும், நீரின் தேவைகளை குறைக்கவும் மிகச்சிறந்த வழி, நஞ்சை நிலங்களில் கோடை உழவு செய்து, அதிக வெடிப்பு விடாமல் மண்ணை பொல, பொலவென்று வைப்பதே. கோடை உழவு செய்த வயல்களில் முன்பருவ விதைப்பு ஏதுவாகிறது. முன்பருவ விதைப்பு என்பது மானாவாரி நிலங்களில் மழை வர, 15 நாட்களுக்கு முன் விதைகளை கடினப்படுத்தி உழவு செய்து விதைப்பது. இதனால், பயிர்கள் முதல் பருவமழையிலேயே முளைத்து மழை நீரைத் திறம்பட பயன்படுத்தி கொள்கிறது. முன் பருவ விதைப்பு ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடும்.பூச்சி தொல்லை குறைகிறதுகோடை உழவு செய்யாத நிலங்களில் களைகளின் பெருக்கம் அதிகமாகி, மண்ணிலுள்ள நீர் மற்றும் சத்துளை உறிஞ்சி விடுகிறது. கோடை உழவு செய்வதால் இக்களைகளின் பெருக்கம் வெகுவாகக் குறைகிறது. பயிர் அறுவடைக்குபின் எஞ்சியுள்ள கட்டைப்பயிர் பெரும்பாலான பூச்சிகளுக்கும், நோய் கிருமிகளுக்கும் உணவாகவும், உறைவிடமாகவும், இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைகிறது. கோடை உழவால் இந்த கட்டை பயிர்கள் மண்ணில் மூடப்பட்டு மக்கி விடுகின்றன. இதனால் பூச்சி, நோய்த்தொல்லை குறைகிறது.இவ்வாறு, அவர்கள், கூறினர்.





