Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சம்பா நெல்லை தாக்கும் புழுக்கள் : வேளாண் துறை வழங்கும் ஆலோசனை

சம்பா நெல்லை தாக்கும் புழுக்கள் : வேளாண் துறை வழங்கும் ஆலோசனை

சம்பா நெல்லை தாக்கும் புழுக்கள் : வேளாண் துறை வழங்கும் ஆலோசனை

சம்பா நெல்லை தாக்கும் புழுக்கள் : வேளாண் துறை வழங்கும் ஆலோசனை

ADDED : அக் 19, 2025 10:18 PM


Google News
மதுரை: மதுரை மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிரில் காணப்படும் பூச்சி, நோய், பாசி தாக்குதலுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இணை இயக்குநர் முருகேசன் கூறியதாவது:

நெற்பயிரில் தண்டுத்துளைப்பான் தாக்குதலில் இளம்பயிர் நடுக்குருத்து வாடி காய்ந்து விடும். நெல்மணிகள் பால் பிடிக்காமல் பதராகி வெண்கதிர்களாகி விடும். இலைச்சுருட்டுப்புழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்து பச்சையத்தை சுரண்டி வெண்மையாக்கி விடும். புகையான் தாக்கிய பயிர்களில் காய்ந்து 'பயிர் தீய்ந்தது' போலிருக்கும். நெல் வயல்களில் உவர் தன்மையால் பாசி வளர்ச்சி தென்படுவதுடன் பயிர்கள் கருகிவிடும்.

கட்டுப்பாட்டு முறை தண்டுத்துளைப்பான் தாக்குதல் இருந்தால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 'புளுபென்டியமைடு' 20 சதவீத டபிள்யூ.ஜி 50 கிராம் அல்லது 'கார்டாப் ஹைட்ரோ குளோரைடு' 50 சதவீத எஸ்.பி 400 கிராம் மருந்தை கலந்து தெளிக்க வேண்டும்.

புகையான் தாக்குதலுக்கு 'பைமெட்ரோசின்' 50 சதவீத டபிள்யூ.ஜி 120 கிராம் அல்லது 'குளோதையானிடின்' 50 சதவீத டபிள்யூ.ஜி 8 முதல் 9.6 கிராம் அல்லது 'டினோடிபியூரான்' 20 சதவீத எஸ்.ஜி. 60 முதல் 80 கிராம் அல்லது 'பிப்ரோனில்' 5 சதவீத எஸ்.சி., 400 மில்லி மருந்து ஏதாவது ஒன்றை தெளிக்க வேண்டும்.

நெல் இலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 'புளுபென்டியமைடு' 20 சதவீத டபிள்யூ.ஜி 50 கிராம் அல்லது 'புளுபென்டியமைடு' 20 சதவீத டபிள்யூ/டபிள்யூ எஸ்.சி., 20 மில்லி அல்லது 'கார்டாப் ஹைட்ரோகுளோரைடு' 50 சதவீத எஸ்.பி. 400 கிராம் அல்லது 'குளோரான் ட்ரனிலிபுரோல்' 18.5 சதவீத எஸ்.சி., 60 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

வயல்களில் பாசி படர்ந்திருந்தால் ஏக்கருக்கு ஒரு கிலோ காப்பர் சல்பேட்டினை 20 கிலோ மணலுடன் கலந்து தண்ணீர் பாயக்கூடிய 10 இடங்களில் பைகளில் கட்டி வைக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ 19:19:19 காம்ப்ளக்ஸ் உரத்தை இலை வழியாகத் தெளித்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்தலாம்.

யூரியா, டி.ஏ.பி., போன்ற உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்த வேண்டும். நெல் வயல்களில் பூச்சி, நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் வட்டார வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us