/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் டிரைவரை கைது செய்ய உத்தரவு போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் டிரைவரை கைது செய்ய உத்தரவு
போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் டிரைவரை கைது செய்ய உத்தரவு
போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் டிரைவரை கைது செய்ய உத்தரவு
போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் டிரைவரை கைது செய்ய உத்தரவு
ADDED : அக் 18, 2025 05:30 AM

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கில் போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரனை கைது செய்து காவலில் வைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
மடப்புரம் கோயிலுக்கு பேராசிரியை நிகிதா காரில் வந்தார். காரிலிருந்த நகை திருடுபோனது. அவர் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27ல் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ., போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆன்லைன் மூலம் முதற்கட்ட இறுதி விசாரணை அறிக்கையை மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (சி.ஜெ.எம்.,) நீதிமன்றத்தில் ஆக.20ல் சி.பி.ஐ.,தாக்கல் செய்தது. வழக்கில் கைதான போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், மற்றொரு எதிரியாக சேர்க்கப்பட்ட போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரனுக்கு செப்.20ல் இறுதி அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது.
வழக்கு விசாரணை மதுரை 5 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று விசாரித்தார். போலீஸ்காரர்கள் 5 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். டிரைவர் ராமச்சந்திரன் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இதுவரை டிரைவர் ராமச்சந்திரன் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்து காவலில் வைக்க வேண்டும்.
விசாரணை அக்.31க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.


