Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் பயணம்; மதுரை விழாவில் பா.ஜ., கூட்டணி தலைவர்கள் பேச்சு

தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் பயணம்; மதுரை விழாவில் பா.ஜ., கூட்டணி தலைவர்கள் பேச்சு

தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் பயணம்; மதுரை விழாவில் பா.ஜ., கூட்டணி தலைவர்கள் பேச்சு

தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் பயணம்; மதுரை விழாவில் பா.ஜ., கூட்டணி தலைவர்கள் பேச்சு

ADDED : அக் 13, 2025 05:35 AM


Google News
மதுரை :மதுரை மண்ணில் துவங்கிய பா.ஜ.,வின் பயணம் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் பயணமாக மாறும், என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

மதுரையில் நடந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ., சார்பில் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற நீதி கேட்கும் பிரசார பயணம் துவக்க விழாவில் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி இந்தியாவை வலிமையான நாடாக மாற்றிக்காட்டியுள்ளார். தமிழகத்திற்கு மட்டும் ரூ.11 லட்சம் கோடி வழங்கியுள்ளார்.

எட்டு வந்தே பாரத் ரயில்கள், ரயில்வே, நெடுஞ்சாலை, விமான நிலையங்களை மேம்படுத்தியுள்ளார். ஆனால் பிரதமர் ஒன்றும் செய்யவில்லை என தி.மு.க., அரசியல் செய்கிறது. பா.ஜ.,வின் இந்த பயணம் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் என்றார்.

பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, ''இன்றைய அரசு அதிகாரிகள் தி.மு.க., கரை வேஷ்டி கட்டாதவர்களாக உள்ளனர். கரூர் நெரிசல் சம்பவத்திற்கு போலீஸ் எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் இருக்கும் வரை யாருக்கும் பாதிப்பில்லை. இந்த ஆட்சி களைய வேண்டும்,'' என்றார்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, ''மதுரை மண்ணில் துவங்கிய எந்த நிகழ்ச்சியும் சோடை போகாது. வெற்றியை தான் தரும். அ.தி.மு.க., - பா.ஜ., என இரண்டு கட்சிகளாலும் தி.மு.க.,விற்கு இரண்டு பக்கமும் இனி இடி தான். ஒரு கல் ஒரு கண்ணாடி நாயகன் ஒரு போதும் உதயநிதி மக்கள் தலைவராக ஏற்க மாட்டார்கள்,'' என்றார்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், உதயகுமார், ''பா.ஜ.,வின் இப்பயணம் தமிழகத்தின் மன்னர், குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதும். பிரதமர் மோடி - முன்னாள் முதல்வர் பழனிசாமி கூட்டணியை பார்த்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி நடுங்கிப்போயுள்ளனர்,'' என்றார்.

த.மா.க., தலைவர் வாசன், மத்தியில் பெரிய கட்சி பா.ஜ., தமிழகத்தில் பெரிய கட்சி அ.தி.மு.க., இந்த இரண்டு கட்சிகள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. பிரதமர் மோடியால் வலிமையான இந்தியா உருவானது போல் வளமான தமிழகம் உருவாக வேண்டும். அது தி.மு.க., ஆட்சியில் ஒரு போதும் நடக்காது. சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஊழல், போதைப் பொருட்கள் கலாசாரம் என்பதாக மாறியதால் எந்த தரப்பு மக்களும் நிம்மிதியாக இல்லை. ஆட்சி மாற்றம் வேண்டும்,'' என்றார்.

தேசிய மகளிரணி தலைவர் வானதி பேசுகையில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி இது. ஆயிரம் அல்ல ரூ.10 ஆயிரம் கொடுத்தாலும் பெண்கள் ஓட்டுகள் தி.மு.க.,விற்கு கிடைக்காது என்றார்.

நுாதன விளக்கம் மேடையில் ஒட்டப்பட்ட பேனரில், தேசிய ஜனநாயக 'கூட்டணி' என்பதற்கு பதில் 'கூட்டனி' என இருந்தது. பின் நிர்வாகிகள் அதை துண்டால் மறைத்தனர். அதுகுறித்து பேசிய பொது செயலாளர் ராமசீனிவாசன், பிளக்ஸில் எழுதியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் படித்தவர் என்பதால் பிழையுடன் எழுதிவிட்டார்,'' என நுாதன விளக்கமளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us