ADDED : அக் 24, 2025 02:33 AM

வாடிப்பட்டி:  பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இக்கோயில் விழா அக்.14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பக்தர்கள் அக்.,21 மாலை அக்னிசட்டி எடுத்தும், அக்.,22 காலை வைகை ஆற்றில் இருந்து அலகு குத்தியும், பால்குடம்,பறவை காவடி எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று கருப்பணசுவாமி கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். மாலை முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். இரவு பாரம்பரிய முறைப்படி வைக்கோல் பிரி வடத்தில் பூட்டிய கிராம கரை காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.
இன்று (அக்.24) பெருமாள் கோயிலில் பொங்கல் விழா, 25ல் மதியம் 3:00 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி நகர் வலம் வருதல் நடக்கும். ஏற்பாடுகளை விழா குழுவினர், மண்டகபடிதாரர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.


