Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிறுதானிய விவசாயிகளுக்கு மானியம்

சிறுதானிய விவசாயிகளுக்கு மானியம்

சிறுதானிய விவசாயிகளுக்கு மானியம்

சிறுதானிய விவசாயிகளுக்கு மானியம்

ADDED : மே 24, 2025 03:38 AM


Google News
மதுரை: தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் சிறுதானிய பரப்பளவை அதிகரிக்கும் வகையில் புதிதாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 3 திட்டங்களின் மூலம் பின்னேற்பு மானியம் வழங்கப்படுவதாக வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

மாவட்டம் முழுவதும் 480 எக்டேர் பரப்பளவில் கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை போன்ற சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உழுவது, களையெடுப்பது, பூச்சிமருந்து தெளிப்பது, பறவைகளை விரட்டும் தொழில்நுட்பத்திற்கு ஆகும் செலவில் ஒரு விவசாயிக்கு ஒரு எக்டேருக்கு ஆகும் செலவில் ரூ.4000 வரை பின்னேற்பு மானியம் தரப்படும். அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நெல்லுக்கான மாற்றுப்பயிராக எந்த வகையான சிறுதானியத்தையும் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா ஒரு ஏக்கருக்கு ரூ.1250 பின்னேற்பு மானியம் தரப்படும். திரவ உயிர் உரம் (அசோஸ்பைரில்லம்), நுண்ணுாட்ட கலவை உர ரசீதுடன் அறுவடை செய்யும் போது செலவழித்த மொத்த தொகைக்கான ரசீது தர வேண்டும். இதற்காக 1400 ஏக்கர் பரப்பளவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் வரகு, குதிரைவாலி தானியம் பயிரிடும் 1000 விவசாயிகளுக்கு தலா ஒரு ஏக்கர் பரப்பளவிற்கான 4 கிலோ விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us