Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்:கலெக்டர்

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்:கலெக்டர்

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்:கலெக்டர்

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்:கலெக்டர்

ADDED : அக் 17, 2025 01:40 AM


Google News
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:

தீபாவளி திருநாளன்று பட்டாசுகளை வெடிப்பதால், நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரிய வழக்கில், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே, பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில், தீபாவளியன்று காலை, 6:00 முதல், 7:00 மணி வரையும், இரவு, 7:00 முதல், 8:00 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவ மனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us