ADDED : ஜூன் 12, 2024 10:27 PM
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே சிக்காரம்பாளையத்தில் உள்ள சென்னிவீரம்பாளையத்தில் கெண்டத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. இதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை 4.30 மணிக்கு மங்கள இசை, திருப்பள்ளி யெழுச்சி, காப்பணிவித்தல், விநாயகருக்கு நான்காம் கால வேள்வி, திரவியாகுதி, மூலிகையாகுதி நிறையாகுதி, பேரொளி வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சித்தி விநாயகருக்கு விமான திருக்குட நீராட்டு, மூலவர் திருக்குட நீராட்டு நடைபெற்றன.
காலை 7.30 மணிக்கு கெண்டத்து மாரியம்மனுக்கு நான்காம் கால வேள்வி பூஜை, திருச்சுற்று வழிபாடு, வேதிகை வழிபாடு, அபிஷேக ஆகுதி, மூலிகையாகுதி நிறையாகுதி, பேரொளி வழிபாடு நடைபெற்றது. பின், காலை 10 மணிக்கு வேள்வி சாலையிலிருந்து திருக்குடங்கள் உலா வந்தன.
அதனை தொடர்ந்து கோபுரத்திற்கு புனித நீர் எடுத்து செல்லப்பட்டு கலசத்திற்கு ஊற்றப்பட்டன. பின் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.----