Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கேரளாவில் பரவும் அமீபா தொற்று பாதிப்பால் எல்லையில் 'அலர்ட்!' கிராம மக்களிடையே சுகாதார துறை விழிப்புணர்வு

கேரளாவில் பரவும் அமீபா தொற்று பாதிப்பால் எல்லையில் 'அலர்ட்!' கிராம மக்களிடையே சுகாதார துறை விழிப்புணர்வு

கேரளாவில் பரவும் அமீபா தொற்று பாதிப்பால் எல்லையில் 'அலர்ட்!' கிராம மக்களிடையே சுகாதார துறை விழிப்புணர்வு

கேரளாவில் பரவும் அமீபா தொற்று பாதிப்பால் எல்லையில் 'அலர்ட்!' கிராம மக்களிடையே சுகாதார துறை விழிப்புணர்வு

ADDED : செப் 23, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
பந்தலூர்: கேரளா மாநிலம் கோழிக்கோடு சுற்று வட்டார பகுதிகளில், 'அமீபா' தொற்று அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தின் எல்லையோர கிராமங்களில் கண்காணிப்பு, ஆய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தை ஒட்டி, கேரளா மாநிலம் வயநாடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்கள் அமைந்துள்ளன. அதில், கோழிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில வாரங்களாக, 'அமீபா' எனும் மூளையை உட்கொள்ளும் நோய் பரவி வருகிறது.

அமீபா உள்ள குளங்கள் மற்றும் ஆறுகளில் குளிக்கும்போது, மூக்கினுள் தண்ணீர் சென்றால் அதனுடன் அமீபா தலைக்குள் சென்று மூளையில் உள்ள திசுக்களை உட்கொள்ளும் தன்மை கொண்டது. மூளையில் வீக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுத்திகரிக்கப்படாத குளங்கள் மற்றும் ஆறுகளில் அமீபா அதிக அளவில் காணப்படுவதாகவும், இதுவரை, 67 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடற்கரையில் காணப்பட்ட உடல் கடந்த வாரம் கோழிக்கோடு, கடற்கரையை ஒட்டி உயிரிழந்த நிலையில் இருந்த ஒருவரை பரிசோதித்த போது, அவருக்கும் அமீபா தொற்று பரவி இருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் இருந்து, தினசரி சுற்றுலா, மருத்துவமனை மற்றும் வியாபார தேவைக்காக கோழிக்கோடு பகுதிக்கு, அதிக அளவில் மக்கள் சென்று வருகின்றனர்.

இத னால், மாவட்ட எல்லையோர கிராமங்களில், அமீபா தொற்று அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. 'கேரளா செல்லும் நீலகிரி மக்கள் சுகாதாரமான குடிநீரை பருகவும், கடற்கரைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்,' எனவும், சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

எவ்வித அச்சமும் வேண்டாம்


சுகாதாரத்துறை இணை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், '' கேரளா வில் அமீபா தொற்று எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்து, தினசரி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் சென்று வந்த இடங்கள், குளித்த இடங்கள் குறித்தும் முழு விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அமீபா தொற்று பரவும் பகுதிகளில் சென்று வந்திருந்தால், அது குறித்து தனியாக மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொடர் காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில், பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதே வேளையில் நீலகிரியில் உள்ள எல்லையோர கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் வருகை குறித்து எவ்வித அச்சப்பட தேவையில்லை. தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது,''என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us