Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மண் ஆணி திட்டம் மலை பாதையில் முழுவதும் செயல்படுத்துவது கட்டாயம்! செயற்கை நுண்ணறிவு உதவியை நாடினாலும் பயன் நிச்சயம்

மண் ஆணி திட்டம் மலை பாதையில் முழுவதும் செயல்படுத்துவது கட்டாயம்! செயற்கை நுண்ணறிவு உதவியை நாடினாலும் பயன் நிச்சயம்

மண் ஆணி திட்டம் மலை பாதையில் முழுவதும் செயல்படுத்துவது கட்டாயம்! செயற்கை நுண்ணறிவு உதவியை நாடினாலும் பயன் நிச்சயம்

மண் ஆணி திட்டம் மலை பாதையில் முழுவதும் செயல்படுத்துவது கட்டாயம்! செயற்கை நுண்ணறிவு உதவியை நாடினாலும் பயன் நிச்சயம்

ADDED : செப் 25, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
குன்னுார்; நீலகிரி மாவட்டம் மலைபாதைகளில் மண்ணரிப்பை தடுக்கும் மரங்கள் வெட்டப்பட்டு வருவதை தடுத்து, புற்களை வளர்க்கும் மண் ஆணி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குன்னுார் - - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் குன்னுார்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதன் பெயரில், வனப்பகுதிகள்; தனியார் வனப்பகுதிகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன.

கடந்த நான்கு ஆண்டு காலத்தில், மலை சரிவுகளில் உள்ள, பலா, ஈட்டி உட்பட பிற மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட சாலையில் வெட்டாமல் பாதுகாக்கப்பட்ட ஈட்டி மரம், ஆபத்தான மரம் என்ற பெயரில் அனுமதி பெறப்பட்டு வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

மரம் வெட்டியதால் பாதிப்பு

மேலும், மலை சரிவான பகுதிகளில், செங்குத்தாக மண் தோண்டப்பட்டுள்ளதால், வேர் பிடிமானம் இல்லாமல் பல மரங்களும் விழும் நிலையில் உள்ளன. இதேபோல, குன்னுார் 'ஹைபீல்டு' பகுதியில், விதிகளை மீறி, நுாற்றுக்கணக்கான கற்பூர மரங்கள் வெட்டப்படுகின்றன. 'சமீபத்தில், இமாச்சல், சட்டீஸ்கர் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட கன மழை பேரிடருக்கு, மலை பகுதிகளில் நிலச்சரிவை தடுக்கும் மரங்களை வெட்டியது முக்கிய காரணம். இதனால், மலை பாதைகளில் உள்ள மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும்,' என, மண் மற்றும் நீர் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

வேர்கள் மண்ணரிப்பை தடுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜு கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மண்ணுக்குரிய மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி இல்லை. மெதுவாக வளரக்கூடிய இந்த மரங்களின் கிளைகள் பரந்த அளவில் இருப்பதால் மழை தண்ணீரை தேக்கி வைத்து சொட்டு சொட்டாக விடும். இது மண்வளத்தை பாதுகாக்க உதவுகிறது.

இதன் வேர்களும் மண்ணரிப்பு ஏற்படுத்துவதை தடுத்து பாதுகாக்கும். பல்லுயிர் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் பெற்றது. 75 சதவீதம் நீரை தேக்கி வைத்து ஊற்றுகளாக மாற்றும் இந்த மரங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

ஊட்டி, குன்னுாரில், அபாய நிலையில் உள்ள கற்பூர மரங்களை வெட்டும் அனுமதி பெற்று பல இடங்களிலும் காட்டு மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க குழுக்கள் அமைத்து கண்காணிப்பு நடத்த வேண்டியது அவசியம். சமீபத்தில் ஈட்டி மரங்களை வெட்ட அரசு அனுமதி வழங்கியது தவறானது.

இதனால், மண்ணரிப்பு மற்றும் நிலச்சரிவு அபாயம் ஏற்படும். நீலகிரி மாவட்டம் பேரிடர் அபாய பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், செயற்கை நுண்ணறிவு உதவியுடன், மண் ஆணி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மேலும், தற்போதுள்ள ஒவ்வொரு மரங்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'இனி வரும் நாட்களில் மலை பகுதிகளில் சாலை பணிகள் நடக்கும் போது, மரங்கள் வெட்டப்படாமல் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் உள்ள சோலை மரங்களும் காக்கப்படும்,' என்றனர்.

மண் ஆணி திட்டம் அவசியம்...


பொதுவாக மலை பாதைகளில் மண் சரிவை தடுக்க, கான்கிரீட் தாங்கு சுவர்கள் கட்டப்படும். இதனால், தாவரங்கள் வளராத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, 'ஜியோ கிரிட்' எனப்படும், பாலிமர் பொருள்களால் செய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட முப்பரிமாண இரும்பு கம்பிகள் வழியாக, வலுவூட்டப்பட்ட பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பாய்கள், புல் விதைகள் விதைக்கப்பட்ட மேல் பகுதியில் பரப்பப்பட்டு, மண் ஆணிகளுடன் இணைக்கப்படுகின்றன.
புற்கள் வளர்ந்தவுடன் மண்ணுக்கான பிடிமானம் அதிகரிக்கும். இது மழை காலத்தில் மண் சரிவை தடுக்கிறது. இப்பணிகள், நீலகிரி, வால்பாறை, கொல்லிமலை, ஏற்காடு மலை ஆகிய இடங்களிலும் ஆய்வு முறையில் துவக்கப்பட்டுள்ளன. இதனை நீலகிரியில் முழுமையாக செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us