Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உலக மருத்துவத்தில் முன்மாதிரியாக திகழும் தமிழகம் ;சர்வதேச மாநாட்டில் சுகாதார அமைச்சர் பேச்சு

உலக மருத்துவத்தில் முன்மாதிரியாக திகழும் தமிழகம் ;சர்வதேச மாநாட்டில் சுகாதார அமைச்சர் பேச்சு

உலக மருத்துவத்தில் முன்மாதிரியாக திகழும் தமிழகம் ;சர்வதேச மாநாட்டில் சுகாதார அமைச்சர் பேச்சு

உலக மருத்துவத்தில் முன்மாதிரியாக திகழும் தமிழகம் ;சர்வதேச மாநாட்டில் சுகாதார அமைச்சர் பேச்சு

ADDED : செப் 28, 2025 02:35 AM


Google News
ஓமலுார்:''உலக மருத்துவ துறையில் தமிழக சுகாதாரத்துறை முன்மாதிரியாக உள்ளது. அது பொது சுகாதாரத்துறையால் சாத்தியமானது,'' என, சர்வதேச பொது சுகாதார மாநாட்டில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.

தமிழக சுகாதாரத்துறை சார்பில், சேலம் பெரியார் பல்கலையில், 4வது சர்வதேச சுகாதார மாநாடு நேற்று முன்தினம், அதன் இயக்குனர் சோமசுந்தரம் தலைமையில் தொடங்கியது. அதில் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டனர். அந்த கருத்தரங்கு நிறைவு விழா நேற்று நடந்தது.

அதில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:

பொது சுகாதாரத்துறையின் தீவிர செயல்பாட்டால், தமிழகத்தில் யானைக்கால் நோய், மலேரியா நோய் இல்லாத மாநிலமாக விரைவில் மாறவுள்ளது. 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில், 2.46 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதால், ஐ.நா., விருது வழங்கப்பட்டுள்ளது.

இதயம் காப்போம், சிறுநீரகம் காக்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள், தமிழகத்தில் உள்ள, 2,336 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படுகின்றன. ஜப்பான் மூளைக்காய்ச்சல் தடுப்பு திட்டம், 15 மாவட்டங்களில் உள்ளது. 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது. உலக மருத்துவ துறையில்

தமிழக சுகாதாரத்துறை முன்மாதிரியாக உள்ளது. அது பொது சுகாதாரத்துறையால் சாத்தியமானது. இந்த கருத்தரங்கில், 12 ஆராய்ச்சி புத்தகங்கள் தயாராகியுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், தி.மு.க.,வின் எம்.பி.,க்களான, சேலம் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி மலையரசன், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் அருள், சதாசிவம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:பொது சுகாதரத்துறை, பல்வேறு நோய்களை விரட்டி வருகிறது. இனி ஆண்டுதோறும் சர்வதேச மாநாடு நடத்தப்படும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.5 சதவீதம். தமிழக பொருளாதார வளர்ச்சி, 11.1 சதவீதம். இது ஈரடுக்கு வளர்ச்சி. பா.ஜ.,வினர், குஜராத்தை மாடலாக காட்டுவர். ஆனால் குஜராத், கோவா, பொருளாதார பட்டியலில் இடம்பெறவில்லை. மக்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து, முதல்வர் ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us