Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கோடை வெயிலால் குடிநீர் தேடி சுற்றித்திரியும் விலங்குகள் தொட்டிகளில் குடிநீர் அவசியம் 

கோடை வெயிலால் குடிநீர் தேடி சுற்றித்திரியும் விலங்குகள் தொட்டிகளில் குடிநீர் அவசியம் 

கோடை வெயிலால் குடிநீர் தேடி சுற்றித்திரியும் விலங்குகள் தொட்டிகளில் குடிநீர் அவசியம் 

கோடை வெயிலால் குடிநீர் தேடி சுற்றித்திரியும் விலங்குகள் தொட்டிகளில் குடிநீர் அவசியம் 

ADDED : மார் 20, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை: கடும் கோடை வெயிலால் காடுகளில் குடிநீரின்றி மான், காட்டு மாடுகள், மர அணில் உள்ளிட்ட விலங்குகள் தவித்து வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் பிரான்மலை, மதகுபட்டி அருகே மண்மலை காடு, ஏரியூர், சங்கரபதிகோட்டை காடு, வாராப்பூர் அருகே பச்சமலை, கோட்டையூர் அருகே வேலங்குடி உட்பட வனத்துறை காட்டு பகுதிகளில் புள்ளி மான், சில காட்டு மாடுகள், மர அணில், மயில், முயல் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. வடகிழக்கு பருவ மழை காலங்களில் மலைகளில் தேங்கி இருக்கும் மழை நீர் மற்றும் சுனைகளில் உள்ள நீரை பருகி உயிர்வாழ்ந்து வந்தன.

கோடை காலங்களில் இவற்றிற்கு போதிய குடிநீர் கிடைப்பதில்லை. இதனால், குடிநீருக்காக விவசாய கிணறுகளை நோக்கி வரும் மான்கள் நாய்கள் கடித்தும், வாகனங்களில் அடிபட்டும் உயிரிழக்கின்றன. தற்போது கோடை வெயில் தாக்கம் கடுமையாக இருப்பதால், மலை மற்றும் காடுகளில் வசிக்கும் விலங்குகள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றன. குடிநீருக்காக விலங்குகள் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க வனத்துறை விலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தொட்டிகளில் குடிநீர் சப்ளை

மாவட்ட வன அலுவலர் பிரபா கூறியதாவது: ஏற்கனவே காடுகளில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் நீர் நிரப்பி, விலங்குகள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி வருகிறோம். தற்போது வாராப்பூர் அருகே பச்சைமலையில் ரூ.13 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, சோலார் பேனல் பொருத்தி, மின் இணைப்பு பெற்றுவிட்டோம். இங்கு தொட்டி கட்டியதும் விலங்குகளுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us