Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மதுரை ராமேஸ்வரம் அரசு பஸ் பயணிகள் முகம்சுழிப்பு; சுகாதாரமற்ற முறையில் இயங்கும் பஸ்கள்

மதுரை ராமேஸ்வரம் அரசு பஸ் பயணிகள் முகம்சுழிப்பு; சுகாதாரமற்ற முறையில் இயங்கும் பஸ்கள்

மதுரை ராமேஸ்வரம் அரசு பஸ் பயணிகள் முகம்சுழிப்பு; சுகாதாரமற்ற முறையில் இயங்கும் பஸ்கள்

மதுரை ராமேஸ்வரம் அரசு பஸ் பயணிகள் முகம்சுழிப்பு; சுகாதாரமற்ற முறையில் இயங்கும் பஸ்கள்

UPDATED : செப் 29, 2025 07:16 AMADDED : செப் 29, 2025 06:12 AM


Google News
மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக கமுதி, ராமேஸ்வரம், ஏர்வாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ராமேஸ்வரத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் தீவின் அழகு மற்றும் பாம்பன் பாலத்தில் இருந்து கடல் மற்றும் கடல் மீது அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தை பார்த்து ரசிக்க பஸ்சில் பயணிக்க விரும்புகின்றனர்.

திருப்புவனம் வழியாக காரைக்குடி கோட்டத்தை சேர்ந்த 90 பஸ்களும், மதுரை கோட்டத்தை சேர்ந்த 40 பஸ்களும், ஈரோடு, கோவை, சேலம் கோட்டங்களை சேர்ந்த தலா ஒன்று முதல் இரண்டு பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன. தொலைதூரம் செல்லும் இந்த பஸ்கள் சுத்தம் செய்யப்படுவதே இல்லை.

போதிய பராமரிப்புமின்றி, புதிய பஸ்கள் கூட அழுக்காகவும் துர்நாற்றம் வீசியும் காணப்படுகிறது. பஸ்களில் அழுகிய பழத்தோல்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலிதீன் பைகள், தண்ணீர் பாட்டில்கள் என பல குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன. காலையில் பஸ் ஸ்டாண்டைவிட்டு பஸ் வெளியே எடுக்கும் போது முன்புற கண்ணாடிகளை கூட சுத்தம் செய்வது கிடையாது.

கண்ணாடி முழுவதும் இறந்த பூச்சிகள், புழுக்கள், இறகுகள் என ஒட்டியபடியே உள்ளன.

தொலை துார பஸ்களில் தானியங்கி கதவுகள் உள்ளிட்டவைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கதவுகளை திறக்கும் கம்ப்ரசர்கள் கருவிகளில் கிரீஸ் உள்ளிட்டவைகள் கூட வைப்பது கிடையாது. இதனால் அடிக்கடி கதவுகள் திறக்க, மூட முடியாமல் அவதிப்படுகின்றனர். பயணிகள் இருக்கைகள் பலவும் சேதமடைந்துள்ளன.

அதே நேரத்தில் தனியார் பஸ்கள் பலவும் சுத்தம் செய்யப்பட்டு பளீச் என தெரிவதால் பலரும் தனியார் பஸ்களையே நாடி செல்கின்றனர்.

அரசு பஸ்களை தினமும் சுத்தம் செய்து இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, புதிய பஸ்களில் ஏற்படும் பழுதினை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us