ADDED : செப் 25, 2025 05:10 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மண்மூடியிருந்த வன்னிமகுந்தான் கால்வாய், தினமலர் செய்தி எதிரொலியாக மீட்டெடுக்கப்பட்டது.
அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட உப்பாறு அணைக்கட்டில் இருந்து அரசினம்பட்டி வழியாக பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்ல வன்னிமகுந்தான் கால்வாய் உள்ளது. சில ஆண்டுகளாக இக்கால்வாயின் பல இடங்களில் குப்பை, மண் மூடியும், புதர் மண்டியும் கால்வாய் இருந்த இடமே தெரியாமல் போனது. வழக்கமாக வரும் மழைநீர் கூட கால்வாயில் வருவதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் ஆக. 29 ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது இக்கால்வாய் தூர்வாரப்பட்டு மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.