Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ பெரியகோவில் சிறிய கோட்டை மதில் சிதிலம் சீரமைக்க நிதியின்றி தொல்லியல் துறை தவிப்பு

பெரியகோவில் சிறிய கோட்டை மதில் சிதிலம் சீரமைக்க நிதியின்றி தொல்லியல் துறை தவிப்பு

பெரியகோவில் சிறிய கோட்டை மதில் சிதிலம் சீரமைக்க நிதியின்றி தொல்லியல் துறை தவிப்பு

பெரியகோவில் சிறிய கோட்டை மதில் சிதிலம் சீரமைக்க நிதியின்றி தொல்லியல் துறை தவிப்பு

ADDED : ஜூன் 19, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்,:உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில், மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனால், 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது.

அப்போது கோவிலுக்கு என்று தனியாக மதில் இருந்தாலும், 16ம் நுாற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள், பெரிய கோவில், சிவகங்கை குளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அகழியும், கோட்டை மதில் சுவர்களையும் உருவாக்கினர்.

பயத்தில் பக்தர்கள்


பெரிய கோட்டையை சுற்றியிருந்த மதில்கள் குடியிருப்புகள், ஆக்கிரமிப்புகளால் சிதைந்து, அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிவிட்டன.

அதுபோல, தஞ்சாவூர் பெரியகோவில், சிவகங்கை பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள சிறிய கோட்டை மதிலும் சிதிலமடைந்து வருகிறது.

வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:

மேற்கு, தெற்கு புறமும் அகழியை ஒட்டி உள்ள மதில் ஆங்காங்கே இடிந்து விழுந்து விட்டது. இந்த இடங்களில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கு புறம் அகழியை ஒட்டியுள்ள மதில் முழுமையாக இடிந்து விழுந்து விட்டது.

தற்போது பெரியகோவிலில், திருக்கயிலாய வலம் துவங்கி நடைபெறும் நிலையில், வடக்குப்புறம் பாதை சரிந்து வருவதால், பக்தர்கள் நடப்பதற்கு அஞ்சுகின்றனர்.

திட்டம் இல்லை


பெரிய அளவில் மழை பெய்தால் இப்பாதையும் முழுமையாக சரிந்து, அகழியில் விழுந்து விடக்கூடிய நிலை உள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், உலகப் புகழ்பெற்ற வரலாற்று பெருமையை நாம் இழக்கும் நிலை ஏற்படும்.

எனவே, சிறிய கோட்டை மதிலை சீரமைப்பதற்கு உடனடியாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, புராதன சின்னத்தைக் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நிதி நெருக்கடி காரணமாக, சுவரை புதுப்பிப்பதற்கான எந்த திட்டமும் தற்போது இல்லை. நிதி கிடைத்தவுடன், மதிற்சுவரை புதுப்பிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்படும்.

இவ்வாறு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us