Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ ரூ.2 கோடியில் கட்டப்பட்ட அகழி பாலம் 8 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத அவலம்

ரூ.2 கோடியில் கட்டப்பட்ட அகழி பாலம் 8 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத அவலம்

ரூ.2 கோடியில் கட்டப்பட்ட அகழி பாலம் 8 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத அவலம்

ரூ.2 கோடியில் கட்டப்பட்ட அகழி பாலம் 8 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத அவலம்

ADDED : செப் 28, 2025 03:08 AM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்:மேல அலங்கம் கோட்டை அகழியின் குறுக்கே, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம், எட்டு ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத அவலத்தால், செடிகள் மண்டி கிடக்கிறது.

தஞ்சாவூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாநகராட்சி நிதியை கொண்டு, கோட்டை அகழியின் மீது பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டது. இதில், சீனிவாசபுரம் வடக்கு பகுதியில், மேலஅலங்கம் - ஜெபமாலைபுரம் சாலையை இணைக்கும் வகையில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேல அலங்கம் கோட்டை அகழியின் குறுக்கே, 100 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.

கடந்த 2017ல் நவ., 29ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, முன்னாள் முதல்வர் பழனிசாமி, காணொளி மூலம் திறந்து வைத்தார். திறக்கப்பட்ட நாள் முதல், தற்போது வரை இப்பாலம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இப்பாலத்தின் தென்புறத்தில் மேல அலங்கத்தின் கோட்டை சுவரில், பலர் வீடுகள் கட்டி குடியிருப்பதால், பாலத்தின் வடக்கு புறத்தில் அணுகு சாலை மட்டும் உள்ளது.

ஜெபமாலைபுரம் செல்லும் பிரதான சாலைக்கு செல்லும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினால் தான், இந்த பாலத்தை பயன்படுத்த முடியும். ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இப்பாலம், எட்டு ஆண்டுகளாக பயன்படுத்தபடாமல் செடிகள் மண்டி கிடக்கிறது.

மேல வீதியில் இருந்து, ஜெபமாலைபுரம் பகுதிக்கு, நான்கு கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டும். இதனால், கடந்த ஆட்சியில் கோட்டை அகழியின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் ஆக்கிரமிப்பை அகற்றாததால், இப்பாலம் கட்டி வீணாகி வருகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மேல அலங்கம் கோட்டை சுவரில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களுக்கு, ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு, ஆட்சி மாற்றம் என தொடர்ந்து ஏற்பட்ட இடையூறுகளால் இந்த ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. விரைவில், பாலத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பும் அகற்றப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us