Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கால்வாய் நீரை மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் ரெங்கசமுத்திரம் கண்மாய் நிரம்பாத அவலம் 250 ஏக்கரில் கேள்விக்குறியாகும் விவசாயம்

கால்வாய் நீரை மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் ரெங்கசமுத்திரம் கண்மாய் நிரம்பாத அவலம் 250 ஏக்கரில் கேள்விக்குறியாகும் விவசாயம்

கால்வாய் நீரை மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் ரெங்கசமுத்திரம் கண்மாய் நிரம்பாத அவலம் 250 ஏக்கரில் கேள்விக்குறியாகும் விவசாயம்

கால்வாய் நீரை மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் ரெங்கசமுத்திரம் கண்மாய் நிரம்பாத அவலம் 250 ஏக்கரில் கேள்விக்குறியாகும் விவசாயம்

ADDED : ஜூன் 19, 2025 03:05 AM


Google News
Latest Tamil News
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், ரெங்கசமுத்திரம் கண்மாய்க்கு கால்வாயில் வரும் நீரை வழியோர கிராமங்களில் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் கண்மாய் நிரம்பாத நிலை ஏற்படுகிறது. போதிய நீர் வரத்து இல்லாததால் கண்மாயை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயத்தை தொடர முடியாமல் தவிக்கின்றனர்.

250 ஏக்கர் நீர்த்தேக்க பரப்பு கொண்ட இக் கண்மாய்க்கு மூல வைகை ஆற்றில் இருந்து மழைக்காலத்தில் நீர் கிடைக்கிறது. ஆத்தாங்கரைப்பட்டி அருகே துரைச்சாமிபுரம் தடுப்பணையிலிருந்து கால்வாய் வழியாக கண்மாய்க்கு போதிய நீர் கிடைப்பது இல்லை. இக் கண்மாய் நிரம்பினால் கோவில்பட்டி, ரெங்கசமுத்திரம், நாச்சியார்புரம் கிராமங்களில் உள்ள 250 ஏக்கர் நேரடி பாசன வசதியும், நூற்றுக்கணக்கான ஏக்கரில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். பல ஆண்டுகளாக இக் கண்மாய் நிரம்பாததால் இப்பகுதி விவசாயம் பாதித்துள்ளது.

விவசாயிகள் கூறியதாவது:

ஒரு போகத்திற்கே வழியில்லை


ரவீந்திரன், நாச்சியார்புரம்: துரைச்சாமிபுரம் தடுப்பணையிலிருந்து கால்வாய் வழியாக வரும் நீர் மரிக்குண்டு கண்மாய், பாலசமுத்திரம் கண்மாய், ரங்கசமுத்திரம் கண்மாய்களுக்கு கிடைக்கும். முறை வைத்து நீரை பிரித்து கொடுப்பதால் ஒரு ஆண்டில் சராசரியாக 30 முதல் 40 நாட்கள் ரெங்கசமுத்திரம் கண்மாய்க்கு நீர் வரத்து கிடைக்கிறது. கால்வாயில் வரும் நீரையும் வழியோர கிராமங்களில் மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் முழு அளவில் நீர் வந்து சேர்வதில்லை.

இதனால் கண்மாய்க்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து வரும் ஓடையில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டதால் மழைநீரும் வந்து சேர்வதில்லை. கண்மாய் நிரம்பினால் கிராமங்களில் நேரடி பாசனம் மூலம் இரு போகம் விளைந்த நிலங்களில் ஒரு போகத்திற்கே வழியில்லை. கால்வாயில் வரும் நீரால் கண்மாய் நிரம்ப நீர்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியின் பிடியில் உள்ள ஆண்டிபட்டிக்கு முல்லை பெரியாறு அணை உபரி நீரை குள்ளப்ப கவுண்டன்பட்டியில் இருந்து கால்வாய் மூலம் கொண்டுவர விவசாயிகள் போராடுகின்றனர். இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும்.

குன்னுார் குளங்களின் மறுகால் நீரை கொண்டு வரவேண்டும்


பெரியசாமி, கோவில்பட்டி: இக்கண்மாய் நூறு ஆண்டுகளை கடந்து பழமையானது. கண்மாயில் தேங்கும் நீரை பயன்படுத்தி நெல் நடவு செய்தால் அறுவடை முடிவதற்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. பயிரைக் காப்பாற்ற பக்கத்து கிணறுகளில் நீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். தரமான விளைச்சலில் ஏக்கருக்கு 50 மூடை கிடைக்கும். நீர் பற்றாக்குறையால் விளைச்சல் 25 மூடையாக குறைகிறது. கண்மாய் ஒரு முறை நிரம்பினால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். மூல வைகை ஆற்று நீரால் கண்மாயில் தேங்கும் நீர் சில மாதங்களில் வற்றி விடுகிறது. நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பதால் விவசாயிகள் பலரும் மாற்று தொழிலுக்கு செல்கின்றனர். குன்னூர் கருங்குளம், செங்குளம் கண்மாய்களில் இருந்து மறுகால் செல்லும் நீரை கால்வாய் மூலம் ரங்கசமுத்திரம் கண்மாய்க்கு கொண்டு வருவதாக தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்றனர். பல ஆண்டுகளாகியும் அதற்கான நடவடிக்கை தான் இல்லை. மண் வளம் இருந்தும் நீர் வளம் முழுமை பெறாததால் விவசாயம் பாதிப்படைகிறது. தொழில் வளம் இல்லாத இப் பகுதி விவசாயிகள் பிழைப்புக்காக வெளியிடங்களுக்கு செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கண்மாயில் முழு அளவில் நீர் தேக்கி இப்பகுதி விவசாயிகளை காக்க அரசு முன்வர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us