Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ 18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு எம்.பி.,யை சூழ்ந்த விவசாயிகள் -* கடைமடைக்கு தண்ணீர் திறக்கவும் முறையீடு

18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு எம்.பி.,யை சூழ்ந்த விவசாயிகள் -* கடைமடைக்கு தண்ணீர் திறக்கவும் முறையீடு

18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு எம்.பி.,யை சூழ்ந்த விவசாயிகள் -* கடைமடைக்கு தண்ணீர் திறக்கவும் முறையீடு

18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு எம்.பி.,யை சூழ்ந்த விவசாயிகள் -* கடைமடைக்கு தண்ணீர் திறக்கவும் முறையீடு

ADDED : அக் 02, 2025 04:04 AM


Google News
Latest Tamil News
கூடலுா : தேனி மாவட்டம் லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றில் இருந்து 18ம் கால்வாயில் பாசனத்திற்காக டி.ஆர்.ஓ., மகாலட்சுமி முன்னிலையில் எம்.பி., தங்கதமிழ்செல்வன் மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.

லோயர்கேம்பில் இருந்து போடி வரை 18ம் கால்வாயை நம்பி உத்தமபாளையம், போடி தாலுகாவில் 4615 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் உள்ளன. இது தவிர 44 கண்மாய்களில் தண்ணீர் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆண்டுதோறும் அக்டோபரில் தண்ணீர் திறக்கப்படும். 2023ல் இரண்டு மாதங்கள் தாமதமாக டிச.,19ல் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டில் (2024ல்) அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்த போதிலும் அரசு உத்தரவு கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் டிச.,21ல் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.20 அடியாக இருந்த நிலையில் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் தலைமதகில் எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் தண்ணீரை வினாடிக்கு 98 கனஅடி வீதம் 30 நாட்களுக்கு திறந்து வைத்தார். இத்தண்ணீர் மூலம் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், சிந்தலைச்சேரி, சங்கராபுரம், மீனாட்சிபுரம், கோடாங்கிபட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்கள் பயன் பெறும். விவசாயிகள் அதிக மகசூலைப் பெரும் வகையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

மஞ்சளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சாலமன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., செய்யது முகமது, தாசில்தார் கண்ணன், உதவி பொறியாளர் அரவிந்த், 18ம் கால்வாய் விவசாய சங்கத்தலைவர் ராமராஜ், செயலாளர் சலேத்து, துணைத்தலைவர் தங்கராஜ், பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத் தலைவர் மனோகரன் பங்கேற்றனர்.

எம்.பி.,யை சூழ்ந்த விவசாயிகள் ''ஆண்டுதோறும் 18ம் கால்வாய் தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்வதில்லை. 44 கண்மாய்களும் நிரம்புவதில்லை. கால்வாயை முறையாக சீரமைக்கவில்லை,'' என்பன உள்ளிட்ட புகார்களை எம்.பி., தங்கதமிழ்ச்செல்வனை சூழ்ந்து விவசாயிகள் முன் வைத்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆண்டுதோறும் கால்வாய் பராமரிப்புக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை கேட்டு பெற்று பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கும், 44 கண்மாய்கள் நிரம்புவதற்கும் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை வேண்டும் என எம்.பி.,யிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us