Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ காற்றில் மாசு அளவு தெரியும்படி வைக்க கோரிக்கை

காற்றில் மாசு அளவு தெரியும்படி வைக்க கோரிக்கை

காற்றில் மாசு அளவு தெரியும்படி வைக்க கோரிக்கை

காற்றில் மாசு அளவு தெரியும்படி வைக்க கோரிக்கை

ADDED : ஜூலை 20, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 320 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய தொழிற்சாலைகள் ஆகும்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பல தொழிற்சாலைகள் இயங்காததால், காற்று, நீர், நிலத்தின் தரம் சரிந்து வருவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர் புகாரை முன் வைத்தனர்.

அதன்படி சுவாசிக்கும் காற்றில் கலக்கும் மாசுவின் அளவை தொடர்ந்து கண்காணிக்கும் நிலையம் ஒன்று, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஏற்றுமதி வளர்ச்சி தொழிற்பூங்கா அலுவலகத்தில், 2016ல் ஏற்படுத்தப்பட்டது.

காற்றின் தரத்தை ஒளிவு மறைவு இன்றி, பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில், அந்த கட்டடத்தின் முகப்பில், மெகா எலக்ட்ரானிக் திரை அமைக்கப்பட்டது. அதன் மூலம், சுற்றுப்புற காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்பர் ஆக்ஸைடு உள்ளிட்ட வேதிப் பொருட்களின் அளவுவீடுகளை பொதுமக்களும் தெரிந்து கொள்ள முடிந்தது.

அந்த எலக்ட்ரானிக் திரை, பல மாதங்களாக பழுதாகி கிடப்பில் போடப்பட்டது. அதன்பின், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தின் மீது, அளவில் சிறிதான எலக்ட்ரானிக் திரை அமைக்கப்பட்டது.

ஒதுக்குபுறமாக உள்ள அந்த அலுவலகத்தில், உயரமான இடத்தில், சிறிய அளவிலான எலக்ட்ரானிக் திரை வைத்திருப்பதால், காற்றில் உள்ள மாசு அளவீடுகளை தெரிந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக முன் இருந்தது போன்று பெரிய அளவிலான எலக்ட்ரானிக் திரை வைக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us