Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கூண்டிற்கு திரும்பிய சிங்கம் பூங்கா அதிகாரிகள் நிம்மதி

கூண்டிற்கு திரும்பிய சிங்கம் பூங்கா அதிகாரிகள் நிம்மதி

கூண்டிற்கு திரும்பிய சிங்கம் பூங்கா அதிகாரிகள் நிம்மதி

கூண்டிற்கு திரும்பிய சிங்கம் பூங்கா அதிகாரிகள் நிம்மதி

ADDED : அக் 06, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், 'லயன் சபாரி' பகுதியில் இருந்து மாயமான சிங்கம், மூன்று நாட்களுக்கு பின் காட்டுப்பகுதியில் இருந்து நேற்று மாலை தானாக கூண்டிற்கு திரும்பியது.

வண்டலுார் பூங்காவில் லயன் சபாரியில் விடப்பட்ட 6 வயதான 'ஷெரியார்' என்ற ஆண் சிங்கம், கூண்டிற்கு திரும்பாமல் திடீரென மாயமானது. இதனால், பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தீவிர தேடுதல் வேட்டையில், சுற்றி வேலி அமைக்கப்பட்ட காட்டுப் பகுதியில் சிங்கம் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டது.

மேலும், 'ட்ரோன்'கள், 10 கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக சிங்கத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சிங்கத்திற்கு உணவு, தண்ணீர் கிடைக்கும் வகையில் பூங்கா நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவித்தது.

ஐந்து குழுக்கள் அமைத்து கண்காணித்து வந்த நிலையில், லயன் சபாரி காட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்த சிங்கம், நேற்று மாலை உணவு வழங்கும் பகுதிக்கு தானாக திரும்பி வந்தது.

இதையடுத்து, பராமரிப்பாளர்கள் சிங்கத்தை கூண்டில் அடைத்து, உணவு அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மூன்று நாட்களுக்கு பின் கூண்டிற்கு சிங்கம் திரும்பியதால், பூங்கா அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us