ADDED : பிப் 23, 2024 07:19 PM

திருவள்ளூர்:சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் மார்க்கத்தில், புட்லுார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புட்லுாரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கிலும்; சனி, ஞாயிறுகளில், 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
காக்களூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், புட்லுாரில் இருந்து 20,000த்திற்கும் மேற்பட்டோர், சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பயணம் செய்கின்றனர்.
புட்லுார் ரயில் நிலையத்தில், மூன்று நடைமேடைகள் இருந்தும், நிழற்குடை முழுதும் நீட்டிக்கப்படாமல் உள்ளது. மேலும், பயணியருக்கு குடிநீர் வசதி இல்லை.
ரயில் நிலைய முதலாவது நடைமேடையை ஒட்டி இரண்டு கழிப்பறை இருந்தும், பயன்பாட்டிற்கு வராமல், மூடப்பட்டு, வீணாகி வருகிறது. இதனால், பயணியர் இயற்கை உபாதைக்காக, திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது.
சமீபத்தில், நான்கு தண்டவாளங்களையும் கடக்கும் வகையில், புதிதாக மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டது. ஆனால், மேம்பாலம் உயரமாக இருப்பதால், வயதானோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் ஆபத்தான முறையில், தண்டவாளத்தைக் கடக்கின்றனர்.
எனவே, புட்லுார் ரயில் நிலையத்தில், அடிப்படை வசதியினை நிறைவேற்றி, 'லிப்ட்' வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, பயணியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
