Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/துணைமின் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில்! திருவாலங்காடில் 50 கிராமத்தினர் அவதி

துணைமின் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில்! திருவாலங்காடில் 50 கிராமத்தினர் அவதி

துணைமின் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில்! திருவாலங்காடில் 50 கிராமத்தினர் அவதி

துணைமின் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில்! திருவாலங்காடில் 50 கிராமத்தினர் அவதி

ADDED : பிப் 11, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள 30 கிராமங்களுக்கு கடம்பத்துார் மற்றும் மோசூர் துணைமின்நிலையம் வாயிலாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மணவூர், தொழுதாவூர், குப்பம் கண்டிகை உட்பட 24 கிராமங்களுக்கு கடம்பத்துாரில் இருந்தும், சின்னம்மாபேட்டை வியாசபுரம், அரிசந்திராபுரம் உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு மோசூர் துணைமின்நிலையத்தில் இருந்தும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மின்சார பிரச்னை


இந்நிலையில் மேற்கண்ட இரண்டு துணைமின்நிலையத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் இருந்து மின்சாரம் கிடைப்பதால், 110 ---- 150 வோல்ட் மின்சாரம் மட்டுமே இப்பகுதிகளுக்கு கிடைக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் பல வீடுகளில் மின்விசிறி கூட சரியாக இயங்காத சூழல் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த, 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் மின்சாரம் தட்டுப்பாடு பிரச்னை உள்ளதால் திருவாலங்காடு பகுதியில் துணைமின்நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் 2020ம் ஆண்டு திருவாலங்காடு மின்துறை அதிகாரியால் முன்மொழிவு அளிக்கப்பட்டது. இதையடுத்து 2021ம் ஆண்டு மின்துறை ஒப்புதல் வழங்கியது.

அதன்படி பழையனுாரில் 14 கோடியே 73 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 1.64 ஏக்கர் பரப்பளவில் துணைமின்நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த துணைமின்நிலையம் 20 எம்.வி.ஏ., திறன் உடையது. எனவே 50 கிராமங்களுக்கு மின்சாரம் முழு சப்ளை கிடைக்கும் எனவும், இதில் 200 மின்மாற்றிகள் வரை அமைத்து முழு மின்சாரம் பெறப்படும்.

இந்நிலையில் துணைமின்நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இரண்டு நாட்கள்


இதுகுறித்து திருவாலங்காடை சேர்ந்த வி.ரங்கநாதன் 65 கூறியதாவது:

எங்கள் பகுதிக்கு மின்சாரம் 15 கி.மீ., துாரத்தில் இருந்து கொண்டு வரப்படுவதால், மழைக்காலத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும். இரண்டு நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட காலமும் உண்டு.

கோடைக்காலத்தில் மின்சாரம் முழு சப்ளை இல்லாமல் மின்விசிறி கூட சுற்றுவது இல்லை. குழந்தைகள் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வீட்டு உபயோக பொருட்களான குடிநீர் மோட்டார், பிரிஜ், வாஷிங்மிஷின் போன்றவை குறைந்தளவு மின்சாரத்தால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.

இங்கு ஓராண்டுக்கு முன் துணைமின்நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கியும் காலம் தாழ்த்துவது ஏன் என தெரியவில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மின்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'துணைமின் நிலையம் அமைக்க உபகரணங்கள் வர தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவாக அனுப்ப வேண்டி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். உபகரணங்கள் வந்ததும் பணிகள் ஆறு மாதங்களில் முடித்து துணை மின் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்' என்றார்.

திருவாலங்காடு, பிப் . 12----

திருவாலங்காடு அடுத்த பழையனுாரில், துணைமின்நிலையம் அமைக்க மின்துறை ஒப்புதல் வழங்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு 1.64 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையல் துணைமின் நிலையம் அமைக்கும் பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் குறைந்தளவு மின்சாரம் மட்டுமே கிடைப்பதால், 50 கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us