ADDED : ஆக 01, 2024 01:33 AM

திருப்பூர் : மாட்டுக் கொட்டகை அமைக்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக கூறி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்தனர்.
போராட்டத்துக்கு தலைமை வகித்த, சங்க பொது செயலாளர் முத்துக்கிருஷ்ணன் பேசியதாவது:
பொங்கலுார் ஊராட்சி, காட்டூர், காட்டூர்புதுார், பெருந்தொழுவு கிராமங்களில், கடந்த, 7 மாதம் முன் வேலை உறுதியளிப்பு திட்டத்தில், மாட்டுக் கொட்டகை அமைத்து கொடுக்கப்பட்டது.
இப்பணிகளை டெண்டர் எடுத்த கான்ட்ராக்டர்கள் தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி, கொட்டகை அமைத்து கொடுத்துள்ளனர்.
அரசின் சார்பில், 1.30 மற்றும், 1.60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், 40 ஆயிரம் ரூபாய் கூட பெறாத கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. பி.டி.ஓ., தான் இதற்கு காரணம் என, புகார் கொடுத்ததன் அடிப்படையில் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
இருப்பினும், முறைகேடு புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2 பயனாளிகளுக்கு மட்டும் கொட்டகை மாற்றியமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக, கலெக்டர், பொங்கலுார் பி.டி.ஓ., மாவட்ட திட்ட அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.இவ்வாறு, அவர்கள் பேசினர்.
அதன்பின், போராட்டத்துக்கு அனுமதி வழங்காததை தொடர்ந்து, விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கி, கலைந்து சென்றனர்.