Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பூண்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி

பூண்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி

பூண்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி

பூண்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி

ADDED : ஆக 01, 2024 01:24 AM


Google News
அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் குமார் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கனிராஜ், துணை தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்களின் விவாதம்:

சுப்பிரமணி (மா.கம்யூ.,): பூண்டி நகராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது. அதற்கு தலைவர் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் ஒரு மனதாக தீர்மானம் இயற்ற வேண்டும். நகராட்சி பகுதிகளிலும், பெரியாயிபாளையம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்.

நல்லாற்றை துார்வார தீர்மானம் இயற்றி பொதுப்பணித்துறைக்கு அனுப்ப வேண்டும். திருப்பூர் ரோட்டிலுள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

தேவராஜன் (மா.கம்யூ.,): பூண்டி பேரூராட்சியாக இருந்தவரை ஆதி திராவிடர்களுக்கான ஈமக்கிரியைக்கு பணம், 2,500 ரூபாய் தரப்பட்டு வந்தது. தற்போது நகராட்சியான பின், இதுவரை அதற்கான தொகை ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளதால் யாருக்கும் பணம் தருவதில்லை. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். 14வது வார்டில் சீமை கருவேல முள் மரங்கள் அகற்றி துார்வார வேண்டும்.

பாரதி (தி.மு.க.,): உப்புத் தண்ணீர் குழாய் இணைப்பு கேட்டு, ஆறு மாதம் கடந்து விட்டது. முறையாக கடிதம் கொடுத்தும் கூட இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சவுடேஸ்வரி அம்மன் கோவில் முன்னுள்ள உள்ள பாலத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளது. 5 மாதமாக கூட்டத்தில் தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்த, 3 நாட்களுக்கு முன் இரு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் அந்த குழியில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

(ஆணையர், 'எதற்காக வாதம் செய்கிறீர்கள்?' என கவுன்சிலர் பாரதியை கேட்டவுடன், கருத்து சுதந்திரத்தை தடுப்பதாக கூறி மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்)

யுவராஜ் (தி.மு.க.,): நகராட்சி பகுதிகளில் மின் வினியோகத்துக்கு தடையாக உள்ள மரங்களை வெட்டினர். ஆனால், அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு உள்ளதால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக உள்ளது. பூங்காவை பராமரிப்பின்றி வைத்துள்ளதால் வார்டு பகுதியில் கவுன்சிலர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

லீலாவதி (இ.கம்யூ.,): 24வது வார்டில் பல இடங்களில் சோலார் லைட்கள் எரிவதில்லை. கடந்த இரண்டு ஆண்டாக பல பகுதிகள் இருளில் உள்ளது. துாய்மை பணியாளர்கள் ஆட்கள் குறையால் சாக்கடையில் அள்ளப்பட்ட கழிவுகள் அப்படியே வார்டு பகுதியில் மலை போல குவிந்துள்ளது.

நடராஜன் (அ.தி.மு.க.,): -எஸ்.வி., கார்டன் பகுதியில் உள்ள ஆழ்குழாய்களை பராமரிப்பு செய்ய வேண்டும்.

கார்த்திகேயன் (அ.தி.மு..க.,):- வி.ஜி.வி., கார்டன் பகுதியில் உள்ள பாலம் பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும். அழகாபுரி நகரில் போர் போட்டு தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும். வயக்காடு பகுதியில் குடிநீர் சப்ளை சீரான முறையில் வழங்க வேண்டும்.

தங்கம் (அ.தி.மு.க.,): -எனது வார்டில் புதிதாக, 200 குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு முறையாக தண்ணீர் போதிய அழுத்தம் இல்லாத காரணத்தினால் செல்வதில்லை. 'கேட்வால்வு' அமைத்து குடிநீர் சப்ளையை பிரித்து தர வேண்டும்.

'தினமலர்' செய்தியால் நடவடிக்கை

கவுன்சிலர் லதா (அ.தி.மு.க.,) பேசியதாவது:

குடிநீர் குழாய், மின் மோட்டார், தெருவிளக்கு ஆகியவற்றை பராமரிப்பதற்காக பத்து லட்சம் என அடிக்கடி கணக்கு காட்டி பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை. நகராட்சியில் உள்ள பூங்காக்கள் அனைத்திலும் உள்ள ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் பூங்காவில் உள்ள விளையாட்டு பொருட்களை பராமரிக்க பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. பூங்கா குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வந்த பின்னரே, நடவடிக்கை துவங்கியுள்ளது. பராமரிக்க ஆட்களே இல்லாமல் எதற்கு நிதி ஒதுக்கி உள்ளீர்கள்?

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us