Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சர்வ(ம்)ர் பிரச்னை மயம்! பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் சோகம்

சர்வ(ம்)ர் பிரச்னை மயம்! பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் சோகம்

சர்வ(ம்)ர் பிரச்னை மயம்! பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் சோகம்

சர்வ(ம்)ர் பிரச்னை மயம்! பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் சோகம்

ADDED : அக் 07, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்: திருப்பூர் உள்ளிட்ட மாவட்டம் முழுதும், கடந்த, 10 நாளாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள சர்வர் கோளாறு காரணமாக பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் பல மணி நேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிற மாவட்டங்களை காட்டிலும், திருப்பூரை பொறுத்த வரை பத்திரப்பதிவு அதிகம். திருப்பூர், நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பகுதியில் ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலகம் செயல்படுகிறது. இதில், மாவட்ட பதிவாளர் அலுவலகம், ஜாயின்ட்-1 மற்றும் 2, தொட்டிபாளையம் சார்-பதிவாளர் அலுவலகங்கள் ஒருங்கிணைந்துள்ளது. இதுதவிர்த்து, நல்லுார், அவிநாசி, பல்லடம், குன்னத்துார், ஊத்துக்குளி, காங்கயம், வெள்ளகோவில், மூலனுார், தாராபுரம், கணியூர், உடுமலை, கோமங்கலம் என, 15 அலுவலகங்கள் மூலம் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் சிரமம்

திருப்பூர் உட்பட மாவட்டம் முழுதும் பதிவுக்காக பயன்படுத்தப்படும் சர்வரின் வேகம் கடந்த, பத்து நாட்களாக குறைந்துள்ளது. பதிவுத்துறை சர்வருக்குள் சென்றால், அடுத்தடுத்து பக்கங்களுக்குள் செல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இணையதள பக்கம் திறந்தால், அதில் பதிவேற்றம் செய்ய முடிவதில்லை. இதனால், ஐந்து நிமிடத்தில் முடிய வேண்டிய பதிவுக்கு, அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. சர்வர் பிரச்னையால் உரிய நேரத்தில் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.

இதுதவிர, பத்திரப்பதிவு ஆவணங்களை பதிவு நடந்த அன்றே ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பத்திரப்பதிவு கட்டணங்களை கருவூலத்தில் செலுத்த வேண்டும். பதிவுபணி முடிந்ததும், ஆவணங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொள்வது வழக்கம். கடந்த, ஒரு வாரமாக பதிவு பணிகள் மாலை, 6:00 மணிக்கு முடிந்தாலும், சர்வர் பிரச்னையால் இரவு, 9:00 மணி வரை அலுவலகத்தில் இருந்து பணிகளை முடித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

பத்திரப்பதிவு, திருமண பதிவு என, பல்வேறு பதிவுகளுக்காக டோக்கன் முன்பதிவு செய்து, அலுவலகம் சென்றால், பதிவுகளை மேற்கொள்ள, பல மணி நேரமாகிறது. இதனால், ஒரு நாள் பொழுது முழுதும் அங்கு இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால், சென்னையில் சர்வர் பிரச்னை என்று ஒரு வார்த்தையில் முடித்து விடுகின்றனர். கடந்த, 10 நாட்களாக இதே நிலை தொடர்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பதிவாளர் ஜெயப்பிரகாஷிடம் கேட்டதற்கு, ''பதிவு செய்வதற்கான சர்வர் கடந்த சில நாட்களாக பிரச்னையாக உள்ளது. மாலை நேரத்தில் சரியாகி விடுகிறது. இப்பிரச்னை தமிழகம் முழுதும் உள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us