/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஊடுபயிர் சாகுபடிக்கு வழிகாட்டுதல் தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு ஊடுபயிர் சாகுபடிக்கு வழிகாட்டுதல் தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஊடுபயிர் சாகுபடிக்கு வழிகாட்டுதல் தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஊடுபயிர் சாகுபடிக்கு வழிகாட்டுதல் தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஊடுபயிர் சாகுபடிக்கு வழிகாட்டுதல் தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 24, 2025 11:30 PM
உடுமலை:தென்னந்தோப்புகளில், மிளகு உள்ளிட்ட ஊடுபயிர் சாகுபடிக்கு, தோட்டக்கலைத்துறை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 50 ஆயிரம் ெஹக்டேருக்கும் அதிகமான பரப்பளவில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், இச்சாகுபடியே பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல லட்சம் தென்னை மரங்கள் நீண்ட கால பயிராக பராமரிக்கப்படும் நிலையில், தொடர் நோய்த்தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னை மரங்களை அகற்றி விட்டு மாற்றுச்சாகுபடிக்கு செல்வது சாத்தியமில்லை; எனவே, விவசாயிகள் இழப்பை ஈடுகட்ட, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், தென்னந்தோப்புகளில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் வாயிலாக, கூடுதல் வருவாய் பெற்று, நஷ்டத்தை தவிர்க்க முயற்சிக்கின்றனர். ஆனால், அதற்கான வழிகாட்டுதல்கள், நாற்று, இடுபொருட்கள் கிடைப்பதில்லை.
ஒப்பந்தம் தேவை தென்னையில், ஊடுபயிராக குறுமிளகு, சாகுபடி செய்வதால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என சில ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிழல் அதிகமுள்ள தென்னந்தோப்புகளில், மிளகு பயிரிடலாம். இந்தியாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட மிளகு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து 69 சதவீதம் குறுமிளகு இந்தியாவிற்கு கிடைக்கிறது.
ஒரு மரத்தின் மீது, 4 மிளகு கொடிகள் வளர்த்து, உயரே வளர செய்யலாம். ஒரு கொடியில், 200 கிராம் வரை மிளகு பெறலாம்.
ஒரு ஏக்கரில், 320 கொடிகள் வளர்த்து, மேலே ஏற்றும் போது, தலா, 200 கிராம் விளைச்சல் கிடைத்தால் கூட, 64 கிலோ மிளகு பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
சில விவசாயிகள் பரிசோதனை முறையில், குறுமிளகு கொடியை நடவு செய்தனர். ஆனால், அதன் பின்னர், போதிய வழிகாட்டுதல் இல்லாததால், பராமரிப்பை கைவிட்டனர்.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், மத்திய அரசின், 'ஸ்பைசஸ் போர்டு' வாயிலாக, குறுமிளகு சாகுபடிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வாரியம் வாயிலாக புதிய ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு மானியமும் வழங்கப்படுகிறது.
எனவே, தோட்டக்கலைத்துறையினர் 'ஸ்பைசஸ் போர்டு'டன், ஒப்பந்தம் செய்து, உடுமலை பகுதியில், குறுமிளகு சாகுபடிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மானியத்திட்டங்களையும் செயல்படுத்த தென்னை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.