Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முறைகேடாக கொட்டப்படும் கழிவுகள்; கிராம மக்கள் அதிர்ச்சி

முறைகேடாக கொட்டப்படும் கழிவுகள்; கிராம மக்கள் அதிர்ச்சி

முறைகேடாக கொட்டப்படும் கழிவுகள்; கிராம மக்கள் அதிர்ச்சி

முறைகேடாக கொட்டப்படும் கழிவுகள்; கிராம மக்கள் அதிர்ச்சி

ADDED : அக் 07, 2025 10:42 PM


Google News
Latest Tamil News
உடுமலை; உடுமலை நகராட்சியில், 'பழைய குப்பைக்கிடங்கிலிருந்து, கழிவுகள் அகற்றப்பட்டு, நான்கு வழிச்சாலை ஓரங்களில் கொட்டப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடுமலை தாராபுரம் ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான, 6.5 ஏக்கர் பரப்பளவில் இருந்த, 19 ஆயிரம் டன் கழிவுகளை, 'பயோ மைனிங்' முறையில் முழுமையாக அகற்ற, ரூ.2.13 கோடி செலவில் கடந்தாண்டு பணிகள் துவங்கின.

ஒரு சில மாதங்கள், தேங்கியிருந்த கழிவுகள் நவீன இயந்திரங்கள் வாயிலாக எடுத்து, பெரிய அளவிலான கன்வேயரில் கொண்டு செல்லப்பட்டு, பிளாஸ்டிக், இரும்பு, மண் என குப்பையில் கலந்துள்ள பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையை சலித்து இயற்கை முறையில் உரமாக மாற்றப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மறு சுழற்சிக்கு பயன்படும் குப்பை, முறையாக மறு சுழற்சி செய்யப்பட்டதோடு, மறு சுழற்சிக்கு பயன்படாத மக்காத குப்பைகளான, பிளாஸ்டிக், துணி உள்ளிட்டவை தனியாக சேகரிக்கப்பட்டு, சிமென்ட் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு பாய்லர் எரிப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தேங்கியிருந்த பெரும்பகுதி கழிவுகள் அகற்றப்பட்ட நிலையில், கடந்த சில மாதமாக, கழிவுகள் பிரிக்கப்படாமல், நேரடியாக அகழ்வு இயந்திரங்கள் வாயிலாக அள்ளப்பட்டு, லாரிகளில் ஏற்றப்படுகிறது.

பின்னர், பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை ஓரங்களிலுள்ள விவசாய நிலங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக், துணி உள்ளிட்ட திரவ கழிவுகளுடன் கொட்டப்படும் குப்பையால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, விவசாய நிலங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டிய நிலையில், முறைகேடாக விவசாய நிலங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்களில் கொட்டப்பட்டு வருவதால், விவசாயிகள், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில்,' கழிவுகளை முறையாக அகற்ற நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதமாக முறைகேடாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கழிவுகள் ரோட்டோரங்களிலும், விவசாய நிலங்களிலும் கொட்டப்படுகிறது. எனவே, இப்பணிகளை முறையாக நகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டப்படி, சலித்து, கழிவுகள் பிரித்து, முறையாக அகற்ற வேண்டும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us