/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மண் மணக்கட்டும்... வாழ்க்கை செழிக்கட்டும் மண் மணக்கட்டும்... வாழ்க்கை செழிக்கட்டும்
மண் மணக்கட்டும்... வாழ்க்கை செழிக்கட்டும்
மண் மணக்கட்டும்... வாழ்க்கை செழிக்கட்டும்
மண் மணக்கட்டும்... வாழ்க்கை செழிக்கட்டும்
ADDED : டிச 05, 2025 07:48 AM

இயற்கை நமக்கு அளித்த கொடை, மண். 'ஒரு அங்குல மண் உருவாக, 300 முதல், 1,000 ஆண்டுகள் ஆகிறது' என்கிறது, விஞ்ஞானம். 'மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்பது, இயற்கையின் நியதி. தொழில் செறிந்த மாவட்டமான திருப்பூரில், விவசாயமும் பெரும் பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது.
மண்ணின் இதயம்
மனோகரன், வேளாண் துணை இயக்குனர் (ஓய்வு) நம்முடன் பகிர்ந்தவை:கடந்த, 1960க்கு முன் தமிழகத்தில் மண் வகைகளில் சராசரி அங்கக கரிமம், 1 சதவீதத்திற்கு மேல் இருந்தது; தற்போது, 0.5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துவிட்டது. அங்கக கரிமம் தான் மண்ணின் இதயம். மண்ணில் உள்ள அங்கக கரிமம் நுண்ணுயிர்களுக்கான உணவு தேவையை மட்டுமின்றி, அதில் வளரும் தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தன்னகத்தே பிடித்து வைத்து, சீரான அளவில் அவற்றை தாவர வளர்ச்சிக்கு அளித்து உதவுகிறது. மழைநீர் மற்றும் பாசன நீரை சேமித்துது வைத்து, சிறிது சிறிதாக தாவரங்களுக்கு நீண்ட நாட்களுக்கு கொடுத்து, வறட்சி காலங்களில் கை கொடுக்கிறது.
இயற்கை உரம்
ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு, 5 முதல், 7 டன் கனிம உரமிட வேண்டும். இவ்வளவு இயற்கை உரத்திற்கு எங்கே போவது என்ற கவலை தேவையில்லை. பயிரிடும் பயிர்களே மண்ணின் தேவைக்கு மேலாக கழிவுகளை தர வல்லது; அவற்றை முறையாக பயன்படுத்தினாலே போதும்.
உதாரணமாக, ஒரு தென்னை மரம், ஆண்டுக்கு மட்டை, நார் உட்பட, 200 கிலோ கழிவுகளை தருகிறது. ஒரு ஏக்கரில் பயிரிடப்படும், 70 மரங்களில் இருந்து, 14 டன் கழிவுகளை இயற்கை நமக்கு தருகிறது. இதை, 100 சதவீதம் இயந்திர உதவியுடன் பொடியாக்கி மீண்டும் மண்ணிற்கே செலுத்தும் போது, மண் வளம், நீர் வளம் பெருகும்; நன்மை தரும் மண்புழு உள்ளிட்ட உயிரினங்கள் உருவாகும். திருப்பூர் மாவட்டத்தில், 85 ஆயிரம் எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் இயற்கை உரம், 30 லட்சம் டன். இவற்றை முறையாக பயன்படுத்தினாலே மண் வளம் எளிதாக பாதுகாக்கப்படும். இதற்கு தேவை விழிப்புணர்வு, முயற்சி மட்டுமே.
உர, நீர் மேலாண்மை அரசு, தனியார் நிறுவனங்கள் வாயிலாக உற்பத்தி செய்யப்பட்டு வினியோகிக்கப்படும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்கள், மண்ணில் உள்ள ஊட்டச்சத்துகளை, பயிர்கள் எளிதில் கிரகிக்க உதவுகின்றன. இவற்றை உரிய பருவம் மற்றும் பயிர்களுக்கு ஏற்றவாறு இடுவதன் வாயிலாக, பயிர் வளர்ச்சி சீராக இருப்பதுடன் மண் வளம் பாதுகாக்கப்படும்.
செயற்கை உரங்கள் இல்லாமல், உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. பயிர் தேவைக்கு ஏற்ப, சமச்சீர் உரங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவதன் வாயிலாக உற்பத்தி திறனை, மண் வள பாதுகாப்புடன் எட்ட முடியும். சமச்சீரற்ற அதிகப்படியான உரம், நிச்சயம் மண் வளத்தை கெடுக்கும். பயிர் பாதுகாப்பில் களை கட்டுப்பாடு, கரிம பயிர் பாதுகாப்பு, வேம்பு கரைசல், ட்ரைகோடெர்மா, ஒட்டுண்ணிகள் பயன்படுத்தும் போது, ரசாயன கொல்லிகளின் பயன்பாடு குறைந்து, மண் வளம் பாதுகாக்கப்படும். அங்கக கரிமம் மண்ணில் அதிகமாகும் போது, மண்ணில் நீர் பிடிப்பு தன்மையும் பல மடங்கு அதிகரிக்கும். எனவே, நீர் மேலாண்மையும் மிக முக்கியம்.---
இன்று(டிச. 5) உலக மண் தினம்.


