Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாறைக்குழியில் குப்பை கொட்டிய விவகாரம் முதலிபாளையம் கிராம சபா ஒத்திவைப்பு

பாறைக்குழியில் குப்பை கொட்டிய விவகாரம் முதலிபாளையம் கிராம சபா ஒத்திவைப்பு

பாறைக்குழியில் குப்பை கொட்டிய விவகாரம் முதலிபாளையம் கிராம சபா ஒத்திவைப்பு

பாறைக்குழியில் குப்பை கொட்டிய விவகாரம் முதலிபாளையம் கிராம சபா ஒத்திவைப்பு

ADDED : அக் 11, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்: திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பை, 2016ல், முதலிபாளையம் ஊராட்சியில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்பட்டது; மக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. மீண்டும் கடந்த சில மாதங்களாக அங்கு குப்பை கொட்டப்படுகிறது. மாநகராட்சி குப்பையை பாறைக்குழியில் கொட்டக்கூடாதென, கோர்ட் தடை விதித்தது. இதனால், அங்கு குப்பை கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தியது.

இந்நிலையில், முதலிபாளையம் ஊராட்சியில், கிராம சேவை மைய கட்டடத்தில் நேற்று கிராமசபா நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள், கருப்புக்கொடியுடன் திரண்டு, ஊராட்சி அலுவலகம் முன்னதாக கூடிநின்று எதிர்ப்பு தெரிவித்தனர். சுகாதாரசீர்கேடு பிரச்னைக்கு தீர்வு கண்ட பிறகே கிராமசபா நடத்தப்பட வேண்டுமென, தொடர்ந்து கோஷமிட்டனர்.

அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'பாறைக்குழியில், மாநகராட்சி குப்பையை கொட்டியதால் கடும் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது; நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதார பிரச்னை என்பதால், கிராமசபாவை ஒத்திவைக்க வேண்டும். சுகாதாரக்கேட்டுக்கு தீர்வு கண்ட பின்னரே கிராமசபா நடத்த வேண்டும். பாறைக்குழியில் இனிமேல் குப்பை கொட்டக்கூடாது; கொட்டப்பட்ட குப்பையை அப்புறப்படுத்த வேண்டும். மாசடைந்த நிலத்தடி நீரை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும்,' என்று கடிதம் அளித்துள்ளோம்,' என்றனர்.

ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (ஊராட்சி) அசோகன், தாசில்தார் சரவணன், பி.டி.ஓ., விஜயகுமார் ஆகியோர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், சுமூக உடன்பாடு ஏற்படாமல், கிராமசபா கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. காலை, 10:00 மணிக்கு துவங்கிய போராட்டம், மதியம் 1:45 மணி வரை தொடர்ந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us