Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பிசியோதெரபி பயிற்சியாளர் பணியிடம் காலி திருப்பூர் மாவட்டத்தில் இருப்போர் 14க்கு 9 பேர் தான்

பிசியோதெரபி பயிற்சியாளர் பணியிடம் காலி திருப்பூர் மாவட்டத்தில் இருப்போர் 14க்கு 9 பேர் தான்

பிசியோதெரபி பயிற்சியாளர் பணியிடம் காலி திருப்பூர் மாவட்டத்தில் இருப்போர் 14க்கு 9 பேர் தான்

பிசியோதெரபி பயிற்சியாளர் பணியிடம் காலி திருப்பூர் மாவட்டத்தில் இருப்போர் 14க்கு 9 பேர் தான்

ADDED : பிப் 29, 2024 08:45 PM


Google News
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையங்களில், காலியாக உள்ள பிசியோதெரபி பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வட்டாரத்திலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்க, பகல் நேர பாதுகாப்பு மையங்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம் செயல்படுகின்றன.

இம்மையங்களில், மாற்றுத்திறனாளி மற்றும் மனநல குறைபாடுள்ள, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். குழந்தைகளை பராமரித்துக்கொள்ள, சிறப்பு பயிற்றுனர்கள், உதவியாளர் மற்றும் பணியாளர் ஒருவரும் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த மையங்களில், உடல் மற்றும் மனதளவில் குழந்தைகளின் வளர்ச்சித்திறனை மேம்படுத்த, பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. மையத்தில் பயிற்சி பெற்று, பல குழந்தைகள், பள்ளிக்கும் சென்றுள்ளனர்.

பெற்றோரும் இம்மையங்களில் குழந்தைகளை பராமரிக்க ஆர்வம் காட்டினர். ஆனால், கடந்த இரண்டு கல்வியாண்டாக, இந்த மையங்களுக்கான பிசியோதெரபி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், குழந்தைகளுக்கு உடல் நலம் மேம்பட கூடுதல் பயிற்சி அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மையங்களில் நியமிக்கப்படும் பிசியோதெரபி பயிற்சியாளர்களுக்கு, குறைவான ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதால், பலரும் பணியிலிருந்து விலகி விடுகின்றனர்.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் மையங்களில், முழுமையான பயன்பெறுவதற்கு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாவட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 14 மையங்களுக்கு 9 பயிற்சியாளர்கள் உள்ளனர். மாற்றுப்பணி (டெப்டேஷன்) முறையில், மையங்களுக்கு சுழற்சியாக பயிற்சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.

'மாநில அளவில் இந்த பணியிடம் பல மையங்களில் காலியாக உள்ளது. பயிற்சியாளர்கள் நிரப்பப்படுவது குறித்து, தகவல் எதுவும் இல்லை,' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us