/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/காலடி பதிப்பாரா மோடி? காத்திருக்கிறது ஒரு கிராமம்காலடி பதிப்பாரா மோடி? காத்திருக்கிறது ஒரு கிராமம்
காலடி பதிப்பாரா மோடி? காத்திருக்கிறது ஒரு கிராமம்
காலடி பதிப்பாரா மோடி? காத்திருக்கிறது ஒரு கிராமம்
காலடி பதிப்பாரா மோடி? காத்திருக்கிறது ஒரு கிராமம்
ADDED : பிப் 25, 2024 01:51 AM

பல்லடம்:திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில் வரும் 27ல் நடைபெற உள்ள பா.ஜ., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் மோடி, தங்கள் கிராமத்திற்கும் வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாக, பல்லடம் அடுத்த கேத்தனுார் கிராமத்தைச் சேர்ந்த, 84 வயதான இயற்கை விவசாயி பழனிசாமி கூறுகிறார்.
அவர் கூறியதாவது:
குஜராத் மாநிலத்தில், 2013ல் நடந்த ஆசிய அளவிலான விவசாய கண்காட்சியில் பங்கேற்ற போது, குஜராத் முதல்வராக இருந்த மோடியை சந்தித்தேன். 'நாடு சுபிட்சம் அடையவும், ராம ராஜ்யத்தை இந்தியாவில் கொண்டு வரவும் நீங்கள் பிரதமராக வேண்டும்' என, அவரிடம் வலியுறுத்தினேன்.
அப்போது, 'நீங்கள் பிரதமர் ஆனதும், உங்கள் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் கொங்கு பகுதிக்கு வரும் போது, கேத்தனுார் கிராமத்தில் என் நிலத்துக்கு கட்டாயம் வர வேண்டும்' என, கோரிக்கை வைத்தேன். அப்போது, 'அவசியம் வருவேன்' என கூறினார்.
'நிர்மல் புரஸ்கார்' விருது பெற்ற கேத்தனுார் கிராமத்துக்கு காந்தி, வினோபா ஆகியோர் வந்துள்ளனர். பிரதமரின் கால் தடமும் எங்கள் கிராமத்தில் பதிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நானும், ஊர் மக்களும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.