ADDED : ஜூலை 25, 2024 11:21 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மா.கம்யூ., சார்பில் மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் அம்பிகாபதி, வீரமணி கண்டன உரையாற்றினர். வட்டக்குழு நிர்வாகிகள் நீலா, மதுசூதன், சுந்தர், சதிஷ்குமார், முத்துவேல், ராமமூர்த்தி, ராஜாராமன், மேகநாதன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் அனைத்து மக்களையும், சிறு, குறு தொழில்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி மாதம்தோறும் ரீடிங் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்துக்கு தேவையான மின் தேவைக்கு அரசு கூடுதல் மின் உற்பத்தி திட்டங்களை தொடங்க வேண்டும். மின் துறையை தனியார் மயமாக்கலை நிறுத்தி, தடையின்றி, குறைந்த கட்டணத்தில் மின்சார வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.