/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மணல் கடத்தலில் தலைமறைவானவரை பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,யை கொல்ல முயற்சி மணல் கடத்தலில் தலைமறைவானவரை பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,யை கொல்ல முயற்சி
மணல் கடத்தலில் தலைமறைவானவரை பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,யை கொல்ல முயற்சி
மணல் கடத்தலில் தலைமறைவானவரை பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,யை கொல்ல முயற்சி
மணல் கடத்தலில் தலைமறைவானவரை பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,யை கொல்ல முயற்சி
ADDED : அக் 20, 2025 12:15 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே, மணல் கடத்தல் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய சென்ற போலீஸ் எஸ்.ஐ.,யை, 'ஸ்குரூ ட்ரைவ்' கம்பியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் அருகே கொங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர், 38. விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிகிறார்.
நேற்று அதிகாலை, 1:50 மணிக்கு, மணல் திருட்டு வழக்கில், பல நாட்களாக தலைமறைவாக இருந்த பி.குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் சுதாகர், 31, என்பவர், அவரது வீட்டில் தனியாக இருக்கும் தகவலறிந்து, அவரை கைது செய்ய சென்றார்.
எஸ்.ஐ., வந்ததை அறிந்த சுதாகர், வீட்டின் கதவை மூடிக் கொண்டு வெளியே வர மறுத்தார்.
ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த சுதாகர், வீட்டிலிருந்த 'ஸ்க்ரூ ட்ரைவ்' கம்பியை எடுத்து, எஸ்.ஐ.,யின் கன்னம், கழுத்து பகுதிகளில் குத்தி விட்டு தப்பினார். போகும் போது, எஸ்.ஐ., வைத்திருந்த 'வாக்கி டாக்கி' கருவியையும் பறித்து தப்பினார்.
தகவலறிந்த, விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த எஸ்.ஐ.,யை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சைக்கு பின், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வீடு திரும்பினார்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக, சுதாகர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக, சுதாகர் மனைவி பிரபாவதி, 26, சுதாகரின் தம்பி பாலாஜி, 28, தாய் தமிழரசி, 60, தந்தை தட்சணாமூர்த்தி, 65, ஆகியோர் மீதும் வழக்கு பதிந்து, பிரபாவதியை போலீசார் கைது செய்தனர்.
தப்பியோடிய சுதாகரை போலீசார் தேடி வருகின்றனர்.


