Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனத்தில் 10க்கும் மேற்பட்ட குளங்கள்... மாயம்; ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை தேவை

திண்டிவனத்தில் 10க்கும் மேற்பட்ட குளங்கள்... மாயம்; ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை தேவை

திண்டிவனத்தில் 10க்கும் மேற்பட்ட குளங்கள்... மாயம்; ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை தேவை

திண்டிவனத்தில் 10க்கும் மேற்பட்ட குளங்கள்... மாயம்; ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை தேவை

ADDED : ஜூன் 04, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் போனது.

திண்டிவனம் பேரூராட்சியாக கடந்த 1949ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 1970ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி முதல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1998ம் ஆண்டு மே 22ம் தேதி முதல், முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

அதனையடுத்து 2008ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முதல், தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இவ்வாறு பழைமை வாய்ந்த திண்டிவனம் பகுதியில் கடந்த காலங்களில் மாரி செட்டிக்குளம், துலுக்கன்குளம், அகழிக்குளம், வீராங்குளம், தட்டான்குளம், தோப்புக்குளம், வாணியன்குளம், ராஜாங்குளம், தீர்த்தக்குளம், நாகலாபுரம் குளம் உள்ளிட்ட 15 குளங்கள் இருந்தன. அதேபோல் பூதான்குட்டை, வண்ணான்குட்டை, செம்படன்குட்டை, சானப்பன் குட்டை என 9 குட்டைகள் இருந்தது.

இதற்கடுத்து காவேரிப்பாக்கம் ஏரி, தாங்கல்ஏரி, ரோஷணை ஏரி, முருங்கப்பாக்கம் ஏரி, கிடங்கல் ஏரி என 7 ஏரிகள் உள்ளன.

இந்த குளங்கள், குட்டைகள், ஏரிகள் அனைத்தும் மழை, வெள்ள காலங்களில், நகரத்திற்குள் தண்ணீர் புகாமல், தண்ணீரை தேக்கி வைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்கியது.

தற்போது, நகராட்சியில் உள்ள 10க்கு மேற்பட்ட குளங்கள் இருந்த இடம் தெரியாமல், ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாக உள்ளது. மீதமுள்ள குளங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புக்குள்ளாகி அதுவும் நாளடையில் இருந்த இடம் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது.

நீர்நிலை புறம்போக்கு, குளம், குட்டை, ஏரி என எதிலும் ஆக்கிரமிப்பு இருக்கக் கூடாது என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் நகராட்சி வரி கட்டுவது, மின் இணைப்பு பெறுவது, பட்டா என அனைத்தையும் முறையாக வாங்கி குடியிருந்து வருகின்றனர்.

சமீபத்தில் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தகுளத்தை சுற்றியுள்ள 50க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்காமல் இருப்பதால், கோர்ட் உத்தரவு நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் உள்ளது. கோவில் நிர்வாகமும் மேல் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.

நகர பகுதியிலுள்ள குளம், குட்டைகள், ஏரிகள் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி தவிப்பதால், மழைக்காலங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.

ஆக்கிரமிப்பு குறித்து நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'தமிழக அரசு சார்பில் கடந்த 2011ம் ஆண்டில் 6வது நீர்பாசன கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. தற்போது 7வது நீர்பாசன கணக்கெடுப்பு வருவாய்த்துறை சார்பில் நடத்தப்பட உள்ளது.

இந்த கணக்கெடுப்பிற்கு பிறகு, திண்டிவனம் நகராட்சி பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி ஆக்கிமிப்புகள் கணக்கிடப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படும். அதன் பிறகுதான் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்படும்' என்றனர்.

திண்டிவனம் நகராட்சியில் எஞ்சியுள்ள குளம், குட்டை, ஏரி பகுதிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us